ETV Bharat / state

சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சரின் உதவியாளருக்கு சிறை தண்டனை விதித்த உயர் நீதிமன்றம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2023, 8:33 PM IST

Former Minister Indira Kumari PA got imprisonment: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியின் உதவியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Disproportionate assets case former minister indira kumari PA got imprisonment madras high court order
சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சரின் உதவியாளர்

சென்னை: கடந்த 1991 - 1996ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்த இந்திர குமாரியின் நேர்முக உதவியாளராக பணியாற்றியவர், வெங்கடகிருஷ்ணன். இந்த நிலையில், வருமானத்துக்கு அதிகமாக 73 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக வெங்கடகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி மஞ்சுளாவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, இருவரையும் விடுதலை செய்து, 2012ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார்.

சாதாரண பின்னணியைக் கொண்ட வெங்கடகிருஷ்ணன் வீட்டில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் வெளிநாட்டு கரன்சிகள், சொத்து ஆவணங்கள், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதையும், அவரது மனைவி மஞ்சுளாவுக்கு என தனிப்பட்ட எந்த வருவாய் ஆதாரம் இல்லாததையும் கருத்தில் கொள்ளாமல், இருவரையும் விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

சொத்துக்களுக்கு உரிய விளக்கங்களை அளித்து சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை ஆராய்ந்து சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என வெங்கடகிருஷ்ணன், மஞ்சுளா தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், ஆவணங்களை ஆராய்ந்ததில், வெங்கடகிருஷ்ணனும், மஞ்சுளாவும் வருமானத்துக்கு அதிகமாக 700 சதவீதம் சொத்துக்கள் சேர்த்துள்ளது நிரூபணமாகியுள்ளதாகக் கூறி, இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், தண்டனை விபரம் குறித்து விளக்கமளிப்பதற்காக வெங்கடகிருஷ்ணன் மற்றும் மஞ்சுளாவை ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டது. அதன்படி, நேரில் ஆஜரான இருவரின் தண்டனை விபரம் குறித்து நீதிபதி அறிவித்தார். இதன்படி, குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்யப்பட்டதால், வெங்கட கிருஷ்ணனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், மஞ்சுளாவுக்கு 18 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க: பட்டியல் இனமக்கள் வசிக்கும் பகுதிக்கு காலனி என்று பெயர் வைத்ததை நீக்கம் செய்ய கோரிய வழக்கில் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.