ETV Bharat / state

கனல் கண்ணன் ஜாமின் மனு தள்ளுபடி... சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

author img

By

Published : Aug 26, 2022, 6:48 AM IST

Updated : Aug 26, 2022, 7:02 AM IST

பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என பாஜக நிர்வாகியும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கனல் கண்ணன் ஜாமின் மனு தள்ளுபடி
கனல் கண்ணன் ஜாமின் மனு தள்ளுபடிtv Bharat

சென்னை: மதுரவாயலில் ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் பங்கேற்றார். அதில், 'ஸ்ரீரங்கம் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என அவர் பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கனல் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலர் குமரன் புகார் அளித்தார். அதுதொடர்பாக, சென்னை சைபர் கிரைம் போலீசார், கலகம் செய்ய துாண்டுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய, இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட கனல் கண்ணன் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமின் கோரி, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், கனல் கண்ணன் தாக்கல் செய்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கனல் கண்ணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தம்முடைய பேச்சு நாட்டின் எந்த சட்டத்துக்கும் எதிரானது அல்ல எனவும், இந்த சிலையை அகற்றக்கோரி, ஏற்கனவே பல்வேறு புகார்கள் வந்துள்ளதாகவும் கூறினார்.

சிலையை நிறுவியவர் மீது நடவடிக்கை எடுக்காமல், மனுதாரர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் சிலையை உடைக்கப் போவதாக கூறவில்லை என தெரிவித்த கனல் கண்ணன் தரப்பு வழக்கறிஞர், சிலையை அகற்ற வேண்டும் என்று தான் அரசுக்கு கோரிக்கை விடுத்தாக கூறினார். இது ஒன்றும் தீங்கானது அல்ல எனவும் எனவே, ஜாமின் வழங்க வேண்டும்" என வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாநகர குற்றவியல் அரசு வழக்கறிஞர், மனுதாரர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளதாகவும் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் ஆகிய மதங்கள் குறித்து பேசியுள்ளதாக குறிப்பிட்டார். கனல் கண்ணனின் பேச்சு மத மோதல், பகைமை, மற்றும் வெறுப்பை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாகவும் அவர் பேசிய வீடியோவை, சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபரின் விவரங்கள் கோரப்பட்டுள்ளதாகவும், பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளதால் ஜாமின் வழங்கக்கூடாது" என வாதிட்டார்.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி எஸ்.அல்லி பிறப்பித்துள்ள உத்தரவில், விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதாலும், ஆதாரத்தை கலைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க ; தாழ்தள பேருந்துகள் இயக்கினால் சேதம் அதிகமாகும்... சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம்

Last Updated : Aug 26, 2022, 7:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.