ETV Bharat / state

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்: சென்னை ஐடி ஊழியர்கள் 14 பேர் காயம்

author img

By

Published : Feb 15, 2021, 8:07 AM IST

தேனி: கொடைக்கானலுக்குச் சுற்றுலா வந்த சென்னை ஐடி ஊழியர்களின் வேன் மலைச்சாலையிலுள்ள 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் 14 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

சிகிச்சைப் பெற்றுவரும் ஐடி ஊழியர்கள்
சிகிச்சைப் பெற்றுவரும் ஐடி ஊழியர்கள்

சென்னை கிண்டி பகுதியில் செயல்படும் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 13 பேர் நேற்று கொடைக்கானல் பகுதிக்கு வேனில் சுற்றுலா வந்துள்ளனர். வாகனத்தை சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் கனகராஜன் (49) என்பவர் ஓட்டிவந்துள்ளார்.

இந்நிலையில் சுற்றுலா முடிந்து நேற்று (பிப். 14) மாலை ஊர் திரும்பியபோது கொடைக்கானல் - வத்தலகுண்டு மலைச்சாலையிலுள்ள டம்டம் பாறை பகுதிக்கு அருகே வாகனம் விபத்துக்குள்ளானது.

சுமார் 100 அடி உயரமுடைய பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்ததில், வேனில் பயணம் செய்தவர்கள் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தேனி மாவட்டம் பெரியகுளம் துணைக் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையிலான காவல் துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அவசர ஊர்தியின் மூலம் பெரியகுளம் அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு, ஐடி ஊழியர்கள் சேலம் ஜெகதீஷ் (23), மதன்குமார் (25), திருநெல்வேலி ஆல்பர்ட் கேபின் (25), மயிலாடுதுறை முகமது அசாரூதீன் (36), அவரது மனைவி ஆயிஷா (26), சென்னை கேசவன் (25), மதுரை சுந்தரேசன் (28) ஆகிய ஏழு பேர் தீவிர சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

மேலும், படுகாயமடைந்த ஓட்டுநர் கனகராஜன், ஐடி ஊழியர்கள் தர்மபுரி அருண்குமார் (34), கன்னியாகுமரி அனுஜா (24), சேலம் பிருந்தா (24), சதீஷ்குமார் (24), மதுரை ஞானகுமார் (24), சென்னை நவீன் (24) ஆகிய ஏழு பேரை மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சிகிச்சைப் பெற்றுவரும் ஐடி ஊழியர்கள்

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தேவதானப்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.