சென்னை ஐஐடியில் மாணவர்களின் கலை திறனை வெளியே கொண்டு வரும் நோக்கில், ஆண்டுதோறும் 'சாரங்' எனப்படும் கலை கலாசார விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில், பங்கேற்க வெளிமாநிலங்களிலிருந்து மாணவர்கள் வருவது வழக்கம். சார்ங் விழா நடைபெறும் நாள்களில், கல்லூரி வளாகமே விழாக்கோலம் போல் காட்சியளிக்கும். ஆடல், பாடல் என மாணவர்கள் கொண்டாட்ட மழையில் நனைந்து கொண்டிருப்பார்கள்.
அத்தகைய பிரபல சாரங் விழா, இந்தாண்டு கரோனா காரணமாக ஆன்லைனில் நடத்திட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பிப்- 4 முதல் 7ஆம் தேதி வரை நடைபெறும் விழாவில், ஆடல், பாடல், கர்நாடக இசை, மேற்கத்திய இசை என 100-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 60 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கலந்துக்கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.
சாராங் 2021 இன் கருப்பொருள் ‘விண்டேஜ் வோக்’என முடிவு செய்துள்ளனர். மாணவர்கள் இந்தாண்டு கடந்துவந்த மெமரிஸ்களை நினைவுக்கொள்ளும் வகையில் திட்டமிட்டுள்ளனர். ஆன்லைனில் நடைபெறும் சாரங் விழாவை, வீட்டிலிருந்தப்படியே மக்கள் இலவசமாக பார்த்துக்கொள்ளலாம்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் ஸ்பாட்லைட் லக்சரஸில் (Spotlight lectures), செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், திரைப்பட இயக்குனர் திரு. கவுதம் மேனன், பிரபல எழுத்தாளர் திரு.ராமச்சந்திர குஹா, புகழ்பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞர் லீலா சாம்சன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
மேலும், இந்தாண்டு, சாரங் குழு ‘மான்’ என்ற சமூக பொறுப்புணர்வு பரப்புரையை மேற்கொண்டுள்ளது. மனநல பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில், பிரபல உளவியலாளர்களுடன் பல்வேறு வெபினார்கள் நடத்தவுள்ளனர். மாணவர்கள் நேரடியாக மனநல நிபுணர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
சாரங் 2021 தொடர்பான மேலும் விவரங்களுக்கு, ஐஐடி சாரங்கின் இணையதளத்தையும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பக்கங்களையும் பின்தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளன.