ETV Bharat / state

திருமணத்துக்குப் பிறகுதான் எனக்கு வெற்றி கிடைத்தது - 'ஆகஸ்ட் 16, 1947' இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன்!

author img

By

Published : Mar 28, 2023, 4:38 PM IST

'ஆகஸ்ட் 16, 1947' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் திருமணத்துக்குப் பிறகுதான் எனக்கு வெற்றி கிடைத்தது என்று கூறியுள்ளார்.

Etv Bharat ’ஆகஸ்ட் 16, 1947’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன்!
திருமணத்துக்குப் பிறகுதான் எனக்கு வெற்றி கிடைத்தது

சென்னை: பொன்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள 'ஆகஸ்ட் 16, 1947' படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை, ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர்கள் கௌதம் கார்த்திக், புகழ், தயாரிப்பாளர் ஏஆர் முருகதாஸ் ஆகியோருடன் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்களை பாடகர்கள் மேடையில் பாடி அசத்தினர். அதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 16, 1947 படத்தின் இசையை ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட, நடிகர் சிவகார்த்திகேயன் பெற்றுக்கொண்டார்.

மேடையில் பேசிய புகழ், ''எனக்கு இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரம் கொடுத்த தயாரிப்பாளர் முருகதாஸ் மற்றும் இயக்குநர் பொன்குமார் அவர்களுக்கு நன்றி. இது என்னுடைய வாழ்க்கையில் முக்கியமான படம். டப்பிங் பண்ணும்போது படம் பார்த்தேன். சிறப்பாக இருந்தது.

சில படங்களில் நகைச்சுவைக் காட்சிகளில் நடித்து உள்ளேன். ஆனால், இந்தப் படத்தில் ஒரு இடத்தில் கூட சிரித்து விடக்கூடாது என பார்த்து பார்த்து நடித்துள்ளேன். ஒவ்வொருவரும் இந்தப் படத்திற்காக நிறைய உழைத்துள்ளனர். வெயில், மழை என்று பார்க்காமல் உதவி இயக்குநர்கள் உழைத்தனர். ஒரு நல்ல படத்தில் வேலை செய்துள்ளேன் என நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது'' என்று கூறினார்.

இயக்குநர் பொன்குமார், ''சிவகார்த்திகேயன் இந்தப் படத்தின் போஸ்டர் வெளியிட்டது முதல் இன்று வரை என்னுடன் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இசையமைப்பாளர் எல்லா பாடல்களையும் சிறப்பாக கொடுத்துள்ளார். திட்டுவதே ஒரு பாடல் போல உள்ளதே என இந்தப் பாடலை இசையமைப்பாளர் உருவாக்கினார்.

உதவி இயக்குநர் அனைவருக்கும் மிக மிக பெரிய நன்றியை சொல்லிக் கொள்கிறேன். இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக் சிறப்பாக நடித்துள்ளார். தினமும் காலை 4 மணிக்கு எழுந்து குரல் பயிற்சி செய்தார். திருநெல்வேலி பாஷை எனக்குத்தெரியாது என்று சொல்லி மிகவும் பயிற்சி எடுத்தார். இதில் வேறு ஒரு கௌதம் கார்த்திக்கை பார்ப்பீர்கள்'' என்று கூறினார்.

நடிகர் கௌதம் கார்த்திக், ''இது எல்லோருக்கும் மிக முக்கியமான படம். எல்லா கஷ்டங்களையும் தாண்டி இந்த படத்தில் வேலை செய்துள்ளோம். ஒரு பிரச்னை காரணமாக இந்தப்படம் என் கையை விட்டுப்போய் விட்டது. ஏ.ஆர்.முருகதாஸ் தான் என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுத்தார். புகழ், நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு இன்னும் மேலே செல்ல வேண்டும்'' என்று கூறினார். மேலும் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களையும் மேடையில் ஏற்றி நன்றி தெரிவித்தார்.

நடிகர் சிவகார்த்திகேயன், ''1947, இது நமது சுதந்திரத்தின் கதை. ஒரு தனி மனிதனின் கதை. சுதந்திரத்துக்காக நிறைய பேர் கஷ்டப்பட்டு உள்ளனர். அதைத்தாண்டி வலி நிறைந்த விஷயங்களை பொன்குமார் கொடுத்துள்ளார். எல்லோருடைய உழைப்பும் இதில் தெரிகிறது. முதல் கதையிலேயே இப்படி ஒரு கதையை தேர்வு செய்துள்ளதன்மூலம் இயக்குநர் சவாலை சந்திக்கத் தயாராக உள்ளார்.

சவாலை சந்திக்கத் தயாராக உள்ளவர், சாதிக்கத் தயாராக உள்ளார் என்று அர்த்தம். படத்தில் வேலை செய்த அனைவருக்கும் வாழ்த்துகள். சீனிக்காரி பாடல்கள் மிகவும் பிடித்திருந்தது. கௌதம் கார்த்திக்கை சந்தித்த பிறகு தான் நான் அவரது அப்பா கார்த்திக்கை சந்தித்தேன். கார்த்திக்கின் நடிப்பு தனித்துவமாக இருக்கும்.

பெரிய நடிகரின் பையன் என்று அவர் எப்போதும் காட்டிக் கொள்வதில்லை. எல்லார் பற்றியும் பேசி, எல்லாரையும் மேடைக்கு அழைத்தது சிறப்பு. கேரக்டர் தான் வாழ்க்கையை முடிவு செய்யும். கல்யாணத்திற்குப் பிறகு வாழ்க்கை மாறும். அது ஒரு பொறுப்பு என்று கூட சொல்லலாம். நான் ஆர்த்தியை திருமணம் செய்த பிறகு தான் எனக்கென தனி நிகழ்ச்சி கிடைத்தது.

கல்யாணம் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும். ஏ.ஆர். முருகதாஸின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். 'எங்கேயும் எப்போதும்' படத்தின் விழாவில் நான் தான் தொகுப்பாளர். இங்கு தான் அந்த விழா நடந்தது. உங்களுடைய தயாரிப்பில் படம் பண்ணது மிகவும் மகிழ்ச்சி. விரைவில் மற்றொன்றும் நடக்கவுள்ளது. (முருகதாஸ் உடன் அடுத்த படம் பண்ண உள்ளதை மறைமுகமாக தெரிவித்தார்).

'வீரம்' படத்தில் அஜித் சொன்ன வசனம் போல தான், நம்முடன் இருப்பவர்களை நாம் பார்த்துக்கொண்டால் நம்மை மேலே உள்ளவன் பார்த்துக்கொள்வான். உங்களுடைய தயாரிப்பில் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சி. நான் மட்டும் வெற்றி பெறாமல், அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்க வேண்டும் என்பதை இங்கு உள்ளவர்கள் சொல்லிக்கொடுத்துள்ளனர்'' என்று கூறினார்.

தயாரிப்பாளர் ஏ.ஆர். முருகதாஸ், ''இந்தப் படத்தின் கதையை சொன்னவுடன் படத்தைத் தயாரிக்க ஒப்புக்கொண்டேன். 3 மொழிகளில் படம் வெளியாகவுள்ளது. நடிகர் கார்த்திக்கை மனதில் வைக்காமல் எந்த ஒரு ரொமான்ஸ் சீன்ஸையும் வைக்க முடியாது. துப்பாக்கி இரண்டாம் பாதியில் ஒரு சீன் வரும். அந்த காட்சி கார்த்திக்கை மனதில் வைத்து தான் பண்ணேன். இது என்னை அறியாமல் வந்தது. இதை விஜய்யிடம் சொல்லவில்லை.

நானும் தட்டு கழுவியுள்ளேன். சாப்பாடு வாங்கி கொடுத்துள்ளேன். நிறைய கஷ்டப்பட்டு தான் வந்தேன். அதை இல்லை என்று சொல்லவில்லை. பொன்குமார் கதை தான் எல்லாம். நல்லவனுக்கு சாப்பாடு போடலாம், வல்லவனுக்கு வாய்ப்பு தான் கொடுக்க முடியும். கதை சிறப்பாக இருந்தால் அவரை வாழ்த்துங்கள். சரியாக இல்லை என்றால் என்னை திட்டுங்கள். அதற்கு வாய்ப்பு இருக்காது என்று தான் நினைக்கிறேன்'' என்று கூறினார்.

இதையும் படிங்க: பொன்னியின் செல்வன்-2 டிரைலர் வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.