ETV Bharat / state

6 மாதங்களில் 5,358 போதைப்பொருள் வழக்குகள் பதிவு - தமிழக காவல் துறை வெளியிட்ட ரிப்போர்ட்!

author img

By

Published : Aug 11, 2023, 8:11 AM IST

Drive Against Drugs திட்டத்தின் கீழ் போதை ஒழிப்பு தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை காவல் துறை மேற்கொண்டு வரும் சூழலில், இந்த ஆண்டு போதை பொருட்கள் விற்பனை செய்தவர்களின் சொத்துக்கள் பறிமுதல், வங்கி கணக்குகள் முடக்கம் குறித்த விவரங்களை தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்தாண்டு போதை பொருட்கள் விற்பனை செய்தவர்களின் சொத்துக்கள் பறிமுதல் குறித்த விவரங்கள்
இந்தாண்டு போதை பொருட்கள் விற்பனை செய்தவர்களின் சொத்துக்கள் பறிமுதல் குறித்த விவரங்கள்

சென்னை: தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் காவல் துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ‘போதையில்லா தமிழகம்’ என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் தமிழ்நாடு காவல் துறை தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது. போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்தலில், அதை அதிகளவில் பயன்படுத்துவோர் இளைய சமுதாயம் என்பது வேதனை அளிக்கும் ஒன்றாகவே சமூக ஆர்வலர்களால் கருதப்படுகிறது.

அதனை தடுப்பதற்காக தமிழ்நாடு காவல் துறையினர் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். கடந்த 2022ஆம் ஆண்டில் போதைப்பொருள் வழக்குகள் 10,665 பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் 14,934 குற்றவாளிகளை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கைதான இவர்களிடமிருந்து சுமார் 28,384 கிலோ கஞ்சா, 0.556 கிலோ கிராம் ஹெராயின், 63,848 போதை மாத்திரைகள் மற்றும் 98 கிலோ கிராம் மற்ற வகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு 2023 ஜூன் மாதம் வரை, போதைப்பொருள் வழக்குகள் 5,358 பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் 7,513 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக 13,953 கிலோ கஞ்சா, 0.678 கிலோ கிராம் ஹெராயின், 10,564 போதை மாத்திரைகள் மற்றும் 125 கிலோ மற்ற போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டு லாபம் பெற்ற குற்றவாளிகளுக்கு எதிராக நிதி விசாரணையை காவல் துறையினர் நடத்தி வருகின்றனர். போதைப்பொருள் வழக்கில் கைதானவர்களின் அசையும், அசையா சொத்துக்கள் சட்ட விதிகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டில், 67 போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடைய 118 பேருக்கு எதிராக நிதி விசாரணையை காவல் துறை மேற்கொண்டுள்ளது. இவர்களின் 33 எண்ணிக்கையிலான சுமார் ரூ.17 கோடி மதிப்புடைய அசையும், அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்த ஆண்டில் 2023 ஜூன் வரை போதைப்பொருள் வழக்கில் சிக்கிய 36 பேருக்கு எதிராக நிதி விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. இவர்களின் சுமார் ரூ. 1.15 கோடி மதிப்பிலான 12 அசையும், அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடையவர்களின் 3,700 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இது 2022ஆம் ஆண்டு எடுத்துள்ள நடவடிக்கையும், 2023ஆம் ஆண்டு மே மாதம் வரை 1,256 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான சட்ட நடிவடிக்கைகள் மட்டுமல்லாமல், தேவை குறைப்பு என்ற இலக்கை அடைவதற்காக போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராக இளைஞர்கள், குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த "Drive Against Drugs" என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை காவல் துறை செயல்படுத்தி வருகிறது.

விழிப்புணர்வு நடவடிக்கையின் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில்முறை கல்லூரிகளில் மாணவ, மாணவியருக்கு போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை நடத்த காவல் துறை திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஒரு வழியாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.