ETV Bharat / state

ஆணவக்கொலை குறித்த விழிப்புணர்வு கூட்டம் பொது இடத்தில் நடந்தாலேயே மக்களை சென்றடையும் - உயர் நீதிமன்றம்

author img

By

Published : Mar 10, 2023, 7:18 PM IST

ஆணவக் கொலை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்கள் பொது வெளியில் நடத்தப்பட்டால் தான், பொதுமக்களை நேரடியாக சென்றடையும் என, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: சங்கர் சமூக நீதி அறக்கட்டளையின் நிறுவனரான கவுசல்யா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "என்னை சாதி மறுப்பு திருமணம் செய்ததால் எனது கணவர் உடுமலை சங்கர் ஆணவக் கொலை செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக சாதி மறுப்பு திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூட்டங்கள் நடத்தி வருகிறேன். சங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு மார்ச் 12ஆம் தேதி மாலை, உடுமலை குமாரமங்கலம் பேருந்து நிலையம் அருகே விழிப்புணர்வு கூட்டம் நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்தேன். ஆனால் அதற்கு காவல்துறை தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. கூட்டம் நடத்த போலீசார் அனுமதிக்க உத்தரவிட வேண்டும்" என வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு இன்று (மார்ச் 10) நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், "சங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு உடுமலை பேருந்து நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடத்த கடந்த 7 ஆண்டுகளாக அனுமதியளிக்கப்படவில்லை. உள்ளரங்க கூட்டமாக நடத்திக் கொள்ளலாம். இந்த கூட்டத்தை நடத்துவதில் தங்களுக்கு விருப்பமில்லை என சங்கரின் சகோதரர் மனு அளித்துள்ளார். அப்பகுதியில் சங்கரின் உறவினர்கள் உள்ளதாலும், சங்கரின் குடும்பத்தார் மூலம் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பிருக்கலாம் என்பதாலும் அனுமதி அளிக்கவில்லை" என வாதாடப்பட்டது.

எனினும் காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, "ஆணவக் கொலை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்கள் பொது வெளியில் நடத்தப்பட்டால் தான் பொதுமக்களுக்கு அது சென்றடையும். நினைவேந்தல் கூட்டம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிடுகிறேன். மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கிறேன்" என கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த கவுசல்யா, தன்னுடன் கல்லூரியில் படித்த உடுமலையை சேர்ந்த சங்கரை கடந்த 2015ம் ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டார். 2016ம் ஆண்டு தம்பதியர் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் இருவரையும் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த சங்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்ட கவுசல்யா, தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். தமிழ்நாட்டை உலுக்கிய இந்த ஆணவக்கொலை வழக்கில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் சின்னசாமி உள்ளிட்ட 6 பேருக்கு தூக்கு தண்டனையும், தன்ராஜ் என்பவருக்கு ஆயுள் சிறையும், மணிகண்டன் என்பவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், சின்னசாமியை விடுதலை செய்தது. ஐவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது.

இதையும் படிங்க: சூரிய சக்தி மின்வேலியை அமைக்க கோரும் வழக்கு-தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.