சென்னை: கரோனா சிறப்பு மருத்துவமனையில் கரோனா தொற்று பின் கவனிப்பு மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்துவைத்தார்.
ஓமந்தூரார் கரோனா சிறப்பு மருத்துவமனையில் சிடி கருவிகளுடன் கூடிய கரோனா பின் கவனிப்பு மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்துவைத்து ஆய்வுசெய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் விஜயபாஸ்கர், "நாட்டிலேயே கரோனா தொற்று சிகிச்சையில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. ஓமந்தூரார் மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள பின்தொடர் கண்காணிப்பு மையத்திற்கு கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் சிகிச்சைக்காக வர வேண்டும்.
தமிழ்நாட்டில் முப்பரிமாண முறையில் சிகிச்சை வழங்கப்படுவதால் 90 விழுக்காடு பேர் கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். கரோனா 2ஆம் அலை வந்தால் அதை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. பெருந்தொற்று காலத்திலும் களத்துக்குச் சென்று அரசு பணியாற்றிவருகிறது.
தமிழ்நாடு அரசு முன்கூட்டியே எடுத்த வியூகங்களால் மாநிலத்தில் கரோனா, டெங்கு உள்ளிட்ட நோய்ப்பரவல் கட்டுக்குள் உள்ளது. பொதுமக்கள் முகக்கவசத்தை முறையாக அணிந்து ஒத்துழைத்தால் எந்த அலையையும் தடுக்க முடியும்.
மேலும் துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை ஆன்லைனில் நடத்துவது குறித்து அரசு பரிசீலித்துவருகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதை பற்றி பொதுமேடையில் பேசுவது நாகரிகமல்ல: அமைச்சர் செங்கோட்டையன்