ETV Bharat / state

"நிதி நிலைக்கு ஏற்ப நிரந்தரப் பணியாளர்கள் நியமிக்கப்படுவர்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

author img

By

Published : Jun 13, 2023, 5:10 PM IST

அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் நிதிநிலைக்கு ஏற்ப நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் துப்பரவு பணியாளர் மற்றும் காவலர் பணியிடங்கள் அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கப்படுவதாகவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Health minister
அமைச்சர்

"நிதி நிலைக்கு ஏற்ப நிரந்தரப் பணியாளர்கள் நியமிக்கப்படுவர்"

சென்னை: சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை அரங்கில், இன்று(ஜூன் 13) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், யோகா மற்றும் இயற்கை மருத்துவ தனியார் கல்லூரிகளுடன் இட ஒதுக்கீடு குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையகரத்தின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் 17 சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அதில் அரசின் ஒதுக்கீடாக 993 இடங்களும், 2 அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் 160 இடங்கள் என ஒட்டு மொத்தமாக அரசு சார்பில் 1,153 இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 557 இடங்கள் என 1,710 இடங்கள் தமிழ்நாடு அரசு தேர்வுக் குழுவின் சார்பில் நிரப்பப்பட்டு வருகிறது.

தனியார் கல்லூரிகளை சேர்ந்தவர்கள் தங்களது குறைகளை தெரிவித்து இருந்தனர். அதனை சரிசெய்வது குறித்து பேசினோம். இயற்கை மற்றும் யோகா மருத்துவப் படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு ஆகஸ்ட் மாதம் வகுப்புகள் துவங்கும். ஆனால், நீட் தேர்வினால் மாணவர் சேர்க்கை பிப்ரவரி வரையில் தள்ளி போகிறது என்று தனியார் கல்லூரிகள் கூறின. விசாரித்ததில் நீட் தேர்வுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என தெரிகிறது. எனவே, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்ததும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியின் வளர்ச்சிக்கு இந்த கூட்டம் உதவும். மேலும், இந்தப் படிப்புக் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்" என்று கூறினார்.

அரசு மருத்துவர்கள் தொடர்ந்து உயிரிழப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "மன அழுத்தம் அனைவருக்கும் இருக்கலாம், தேவையற்ற பீதியை கிளப்ப வேண்டாம். மருத்துவர்கள் பணி சுமையால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்பது உண்மை இல்லை. மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 1,021 மருத்துவ பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் தமிழ் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர்.

அதன் மீதான தீர்ப்பு வந்துள்ளதால், தேர்வு எழுதிய மருத்துவர்களின் தமிழ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர்களை பணியில் நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அதேபோல், 980 மருந்தாளுநர் பணிக்கு 43 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான இடங்களையும் நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. காலி பணியிடங்களை நிரப்ப தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "கலைஞர் நூற்றாண்டு சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை நாளை மறுநாள் திறக்கப்பட உள்ளது. இந்த மருத்துவமனைக்கு 30 இணை பேராசிரியர், உதவி நிலைய மருத்துவர் இரண்டு பேர், 133 மருத்துவர்கள் பணி அமர்த்தபட்டுள்ளனர். இந்த மருத்துவமனையில் பணியாற்ற 60 நர்சிங் பணியாளர்களும் காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு 757 பணியிடங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதிய மருத்துவமனைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை ஏற்படுத்தி வருகிறோம். நிர்வாக வசதிக்காக, பொருளாதார வசதிக்காக சில விஷயங்கள் செய்ய வேண்டி உள்ளது. நிரந்தர பணியாளர்களை தொடர்ந்து பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த மருத்துவமனைக்கு 400 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அதில் 63 கோடி ரூபாய் புதிய பணியிடங்களுக்கு செலவு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் துப்பரவு பணியாளர்கள், காவலர்கள் அவுட்சோர்சிங் மூலம் நியமிக்கப்படவுள்ளனர். தற்பொழுது புதிதாக திறக்கப்பட்ட நகர நல்வாழ்வு மையங்களுக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர் ஆகியப் பணியிடங்கள் மாவட்ட சுகாதார மையத்தின் மூலம் நிரப்பப்பட்டுள்ளது.

புதியதாக திறக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில் 7 மருத்துவக்கல்லூரிகள் மருத்துவமனைகளுடன் செயல்பட துவங்கி உள்ளது. அந்த மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரணங்கள் வாங்கி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அதன் மீது தீர்ப்பு வந்த உடன் பணியிடங்கள் நிரப்பப்படும்.

தமிழக அரசு மருத்துவமனையில் பணியில் உள்ளவர்கள் இங்குதான் பணியாற்ற வேண்டும், இங்கு விடுப்பில் இருந்து கொண்டு வெளி நாட்டில் சிலர் வேலை செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அப்படி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கலைஞர் உயர் சிகிச்சை மருத்துவமனை திறக்கப்பாட்டாலும் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை இப்படியே செயல்படும். அது கலைஞர் உயர் சிகிச்சை மருத்துவமனையாக செயல்படும். ஒமந்தூரார் மருத்துவமனை தலைமைச் செயலகமாக கட்டப்பட்டது. ஆனால், அதனை மருத்துவமனையாக கடந்த ஆட்சியில் மாற்றினார்கள். அது போல் மாற்றமாட்டோம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: "NEET தேர்வை விட NExT தேர்வு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்" பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.