ETV Bharat / state

134 அடியில் எழுதாத பேனா வைப்பது அவசியமா? - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

author img

By

Published : Feb 3, 2023, 3:07 AM IST

’திருவள்ளுவரின் 133 அடி சிலையை மீறி கலைஞரின் பேனா நினைவுச்சின்னம் 134 அடியில் வைப்பது வக்கிரம். நினைவுச் சின்னம் வேண்டுமென்றால் திமுகவின் சொந்த நிதியில் கட்டலாம்’ என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (பிப்.02) தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரகாஷ் சாகுவை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் 238 பூத்களிலும் 30ஆயிரம் முதல் 40ஆயிரம் வாக்குகள் போலியாக உள்ளது எனவும்; இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஈரோடு கிழக்கு தொகுதியில் 238 பூத்களிலும் 30ஆயிரம் முதல் 40ஆயிரம் வாக்குகள் போலியாக உள்ளன. அதை சரிபார்க்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். ரயில்வே காலனியில் உள்ள 180 வாக்குகள் பல்வேறு பகுதிகளுக்கு இடம் மாறி சென்றிருந்தாலும் இன்னும் வாக்கு அங்கே வாக்குகள் உள்ளன.

இதையும் சரி பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளோம். மேலும் பணப்பட்டுவாடா, பல்வேறு வகையான முறைகளில் தேர்தல் விதிகளை எல்லாம் கால்களில் போட்டு மிதித்து, ஜனநாயகத்தை நசுக்குகின்ற திமுக செயல்படுவதை எடுத்து கூறியுள்ளோம். கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

எந்த நிலையிலும் இரட்டை இலை சின்னம் முடக்கப்படாது, அதிமுக சார்பில் முறையாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது, இந்த வழக்கு தற்போது நிலுவையில் இருப்பதால் இது குறித்து தற்போது கூற முடியாது. ஓபிஎஸ் மண்குதிரை. அவரை நம்பி ஆற்றில் இறங்கக்கூடாது என மக்களுக்கே தெரியும்” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுக தலைமையில் தான் கூட்டணி. இன்றளவும் பாஜக உடன் கூட்டணி தொடர்கிறது. கூட்டணி இறுதி செய்த பின்னர் அவர்களுடைய படங்கள், பேனர்கள் வைக்கப்படும். பேனா நினைவுச் சின்னம் வைப்பதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும்.

அதனால், பெரும்பான்மையாக பாதிக்கப்படுவது மீனவர்கள் தான். உலகத்திற்கே பொதுமறை தந்த திருவள்ளுவரின் 133 அடி சிலையை மீறி கலைஞரின் பேனா நினைவுச்சின்னம் 134 அடியில் வைப்பது வக்கிரம். நினைவுச் சின்னம் வேண்டுமென்றால் திமுகவின் சொந்த நிதியில் கட்டலாம்.

மெரினாவில் உள்ள ஜெயலலிதா மட்டும் எம்ஜிஆரின் நினைவிடங்களை பார்ப்பதற்கு வார இறுதி நாட்களில் பொதுமக்கள் 100 சதவீத அளவில் வருகின்றனர். 20 சதவீத குறைந்த அளவிலேயே கருணாநிதியின் நினைவிடத்தைப் பார்க்க வருகின்றனர். அதைப் பொறுக்க முடியாமலேயே பேனா நினைவுச்சின்னத்தை அமைக்க திமுக அரசு முயல்கிறது.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து சுற்றுச்சூழலைப் பாதிக்கும், எழுதாத பேனா அவசியமா? அன்று நடைபெற்றது கருத்து கேட்புக் கூட்டமாக இல்லாமல் திமுகவின் பொதுக் கூட்டமாக இருந்தது. முழுக்க முழுக்க சமூக விரோதிகளை களம் இறக்கி எதிர்க்கருத்து கூறுபவர்களை பேசவிடாமல் தடுத்தது. கருணாநிதிக்கு நினைவுச் சின்னம் வைக்க வேண்டும் என்றால் அறிவாலயத்தில் வைத்தால் அது எங்களுக்கு ஓகே. ஒருவேளை பாஜக வேட்பாளரை நிறுத்தினாலும் நாங்கள் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சினிமாத்துறையிலும் வடமாநிலத்தவர்கள் நுழைந்துவிடுவார்கள் - நடிகர் ராதாரவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.