ETV Bharat / state

TMB முன்னாள் தலைவரின் ரூ.293.91 கோடி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி

author img

By

Published : Dec 28, 2021, 11:34 PM IST

அமலாக்கத் துறை நடத்திய தொடர் விசாரணையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின்(TMB) முன்னாள் தலைவர் எம்ஜிஎம் மாறன் என்கிற நேசமணி மாறன் முத்துவின் 293.91 கோடி மதிப்புள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவரின் ரூ.293.91 கோடி சொத்துக்கள் முடக்கம்
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவரின் ரூ.293.91 கோடி சொத்துக்கள் முடக்கம்

சென்னை: ரிசர்வ் வங்கி அமலாக்கத் துறையிடம் கடந்த 2014ஆம் ஆண்டு புகார் ஒன்றை அளித்தது. அதில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 46 ஆயிரம் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில், முறைகேடு நடந்திருப்பதாகப் புகார் தெரிவித்தது.

குறிப்பாக, 2007 மற்றும் 2011, 2012 ஆகிய காலகட்டங்களில் பங்குகள் முறைகேடாக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் தூத்துக்குடி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மற்றும் மும்பை ஸ்டாண்டர்ட் ஸ்டேட் வங்கியும் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் மற்றும் இயக்குநருமான எம்ஜிஎம் மாறன் என்கிற நேசமணி மாறன் முத்து உடந்தையாக இருந்ததாகவும் ரிசர்வ் வங்கி புகார் அளித்தது.

இதனடிப்படையில் அமலாக்கத்துறை ரூ.608 கோடி ரூபாய் அளவில் வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பங்குகளை ஒதுக்கீடு செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கி மற்றும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி அதன் நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

ரிசர்வ் வங்கி அமலாக்கத் துறையிடம் புகார்
ரிசர்வ் வங்கி அமலாக்கத் துறையிடம் புகார்

அதனை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை செய்ததில் ஃபெமா FEMA எனப்படும் வெளிநாட்டு பரிவர்த்தனை மேலாண்மை சட்டத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கி ரூ.100 கோடி, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிக்கு ரூ.17 கோடி அபராதம் விதித்துள்ளது.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் எம்ஜிஎம் மாறன் சிங்கப்பூரில் பல கோடி ரூபாய் அளவிற்குப் பணத்தை வங்கியில் வைத்துக்கொண்டு, வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பரிவர்த்தனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டதால், ரூ.35 கோடி அபராதம் அமலாக்கத்துறை அவருக்கு விதித்துள்ளது.

அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை..
அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை..

குறிப்பாக, மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் வெளிநாட்டுப் பரிவர்த்தனை மேலாண்மை சட்டத்தை மீறி பங்குகளை ஒதுக்கியது உறுதியானதால் இந்த நடவடிக்கை அமலாக்கத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அபராதத் தொகை செலுத்தத் தவறினால் அடுத்த கட்டமாகச் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கை மற்றும் கைது நடவடிக்கை பாயும் என அமலாக்கத்துறை எச்சரித்தது.

இந்நிலையில், அமலாக்கத் துறை நடத்திய தொடர் விசாரணையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் எம்ஜிஎம் மாறன் என்கிற நேசமணி மாறன் முத்துவின் ரூ.293.91 கோடி மதிப்புள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அமலாக்கத்துறை விசாரணையில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் நேசமணிமாறன் முத்து சிங்கப்பூரில் இரண்டு நிறுவனங்கள் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட வங்கிக் கணக்கில் முறைகேடாகப் பங்குகளை 2005-06 மற்றும் 2006-07 நிதியாண்டில் 5,29,86,250 SGD எனப்படும் சிங்கப்பூர் டாலராக முதலீடு செய்ததைத் துறையினர் கண்டுபிடித்தனர்.

மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாமல் முதலீடு செய்யப்பட்ட பணத்தின் இந்திய மதிப்பு ரூ.293.91 கோடி. பிரிவு 37A (1) ன் விதிகள் அடிப்படையில், நேசமணி மாறன் முத்து வெளிநாட்டில் குடியுரிமை பெற்றவராக இருந்த போதும், சிங்கப்பூரில் முறைகேடாக முதலீடு செய்த பணத்திற்கு ஈடான இந்தியச் சொத்துக்களை முடக்கலாம் என்று உள்ளது.

அந்த அடிப்படையில் ரூ.293.91 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

(1) சதர்ன் அக்ரிஃபுரேன் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட்
(2) ஆனந்த் டிரான்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட்
(3) எம்ஜிஎம் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்

(4) எம்ஜிஎம் டைமண்ட் பீச் ரிசார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆகிய நிறுவனத்தின் பங்குகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

இதையும் படிங்க: Case against Mansoor Alikhan: நடிகை சொத்தை அபகரிக்க முயன்ற மன்சூர் அலிகான்?

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.