ETV Bharat / state

Qnet தங்கக்காசு மோசடி விவகாரம்.. சென்னையில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு..

author img

By

Published : Jan 19, 2023, 7:01 AM IST

Qnet தங்கக்காசு மோசடி விவகாரம் தொடர்பாக 2 நாள்கள் அமலாக்கத்துறை நடத்திய சோதனை நிறைவுபெற்றது.

Qnet தங்கக்காசு மோசடி விவகாரம்
Qnet தங்கக்காசு மோசடி விவகாரம்

சென்னை: ஹாங் காங் நாட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கியூ நெட் (Qnet) நிறுவனமானது, விகான் டைரக்ட் செல்லிங் என்ற நிறுவனம் மூலமாக இந்தியாவில் முதலீடு செய்தவர்களுக்கு தங்க காசாக வழங்கப்படும் என்று கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தது. அதனை நம்பி லட்சணக்கானோர் பணத்தை செலுத்தினர்.

அதன்பிந் எம்எல்எம் என்ற முறைப்படி நாடு முழுவதும் 5 லட்சம் பேரிடம் பணத்தை வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் குவிந்தன. கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழகத்தில் மட்டும் 20,000 மேற்பட்டோர் முதலீடு செய்து ஆயிரம் கோடிக்கு மேல் ஏமாந்ததாக தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக மும்பை சைபராபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்றது.

சென்னையில் சேத்துப்பட்டு போலீசார் முதற்கட்டமாக வழக்கை பதிவு செய்து, பின்பு வழக்கின் தன்மை காரணமாக சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, இதில் தொடர்புடைய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த இந்த மோசடியில் தொடர்புடைய விகான் டைரக்ட் செல்லிங் நிறுவனத்தின் நிர்வாகி மைக்கேல் பாரேரா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் அமலாக்கத்துறையினர் கடந்த 2014 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொள்ள ஆரம்பித்தனர். கடந்த 2017ஆம் ஆண்டு முதற்கட்டமாக 150 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கினர். தொடர்ந்து இந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பொதுமக்களிடம் வசூல் செய்த பணத்தை சட்டவிரோத பணப் பரிமாற்றத்தின் மூலம் சொத்துக்களாகவும் முதலீடுகளாகவும் எங்கு மறைத்து வைத்திருக்கிறார்கள் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாகத்தான் கடந்த 17, 18 தேதிகளில் சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விகான் டைரக்ட் செல்லிங் நிறுவனத்தில் நேரடியாக தொடர்புடைய பங்குதாரர்கள் நிர்வாகிகள் வீட்டில் அமலாக்க துறையினர் அதிரடியாக சோதனைகளை மேற்கொண்டனர்.

அதனடிப்படையில் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பெண் தொழிலதிபர் பத்மா வீராசாமி வீட்டில் இரண்டு நாட்கள் சோதனை நடைபெற்றது. பெண் தொழிலதிபர் பத்மா 2008ஆம் ஆண்டு சிபிசிஐடி போலீஸ்சாரால் கைது செய்யப்பட்டு அவருடைய 190 கோடி ரூபாய் அளவிலான சொத்துக்கள் முடக்கப்பட்டது. இந்த நிலையில் அமலாக்கத் துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு பல்வேறு முக்கிய ஆவணங்களையும் அவர் தொடர்புடைய வங்கிக் கணக்குகள் மற்றும் விகான் டைரக்ட் செல்லிங் நிறுவனத்துடன் தொடர்புடைய நபர்களின் 36 வங்கிக் கணக்குகளை முடக்கினர். இந்த 36 வங்கி கணக்குகளில் சுமார் 90 கோடி ரூபாய்க்கு மேல் பணம் இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இந்த வங்கிக் கணக்குகளில் உள்ள தொகைகளின் எண்ணிக்கை குறித்து கணக்கிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதேபோன்று பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளிட்டவை குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் அமலாக்க துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர் விசாரணையில் பொதுமக்களிடம் வசூல் செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மறைத்து வைத்திருக்கும் இடங்கள் குறித்து தெரியவரும் எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பராமரிப்புத்தொகை மற்றும் ஜீவனாம்சம்கோரிய மனுக்களை விரைந்து விசாரிக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.