ETV Bharat / state

மது அருந்தினால் அனைத்துவகை புற்றுநோய்களும் வரும் - மருத்துவர்கள் எச்சரிக்கை

author img

By

Published : Jan 14, 2023, 6:42 AM IST

அனைத்து வகை மதுவினாலும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat


சென்னை: இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒயின், பீர், பிராந்தி, விஸ்கி, நாட்டு சாரயம் உள்ளிட்ட அனைத்து எத்தனால் கலந்த மதுபான வகைகளும் புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பதுடன், பல்வேறு தீவிர உடல்நல குறைபாடுகளையும் ஏற்படுத்துகின்றன. இதுகுறித்த விழிப்புணர்வு மக்களுக்கு மிகவும் குறைவாகவே இருப்பது வருத்ததிற்குரியது. மருந்திற்காக உட்கொள்ளப்படும் ஆல்கஹால் நுகர்வு உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று சில ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. ஆனால், தொடர்ந்து மது அருந்தும் பழக்கம் மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் உள்ளிட்டவைகள் ஏற்பட துணைக்காரணியாக இருக்கிறது.

நமது உடலில் ஆல்கஹால்: இதுகுறித்து கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியின்(Govt Kilpauk Medical College), ராயப்பேட்டை புற்றுநோய் சிறப்பு மையத்தின் அறுவை சிகிச்சைத்துறை பேராசிரியர் சுப்பையா சண்முகம் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், 'வாயில் போட்டு மெல்லும் புகையிலைப் பொருட்கள் மற்றும் ஆல்கஹால் கலந்த சாரயத்தை அருந்துவதால் புற்றுநோய் வருகிறது. மதுவை அளவாக மருந்து அளவிற்கு அருந்துவதால் உடல் நலத்திற்கு நன்மை என்று சில ஆய்வில் கூறுகின்றன. மனிதர்கள் உண்ணும் உணவை செரிமானம் செய்வதற்கு நம் உடலிலேயே உள்ள ஆல்கஹால் பயன்படுகிறது.

மதுவை சமூகத்திற்காகவும், நண்பர்களுடன் இணைந்து ஒரு சில நாட்களில் குடிக்கிறோம் என்று ஆரம்பித்தால், மதுவிற்கு அடிமையாகி விடுகின்றனர். மதுவை அருந்துபவர்கள் சரிவிகித உணவை உண்ணாமல் இருக்கின்றனர். மது அருந்தியப் பின்னர் வயிறு நிறைந்து விடுவதால் உணவையும் தவிர்கின்றனர். இதனால், புற்றுநோய் நேரடியாக வராவிட்டாலும், பிற உறுப்புகள் பாதிக்கப்பட்டு, புற்றுநோய் தாக்கம் ஏற்படுகிறது. மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு என கூறப்பட்டு இருந்தாலும், போதுமான விழிப்புணர்வு இல்லாமல் அதிகளவில் மது அருந்துகின்றனர்.

கேடு தரும் புகையிலை: புகையிலைப் பொருட்களை பயன்படுத்தும்போது, அதில் உடல் நலத்திற்கு கேடு விளைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. புகையிலை, ஆல்கஹால் கலந்த மதுவை அருந்தும் பழக்கத்தை பொதுமக்கள் முழுவதும் தவிர்க்க வேண்டும். இதுகுறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதுகுறித்து ரேலா மருத்துவமனையில் (Rela hospital chennai) புற்றுநோய் நிபுணர் ஜெகதீஸ் சந்திரபோஸ் கூறும்போது, 'உடம்பிற்கு புகையிலை மற்றும் குடிப்பழக்கம் இரண்டும் கெடுதல் என்று நாம் அனைவரும் அறிவோம். குடிப்பழகத்திற்கு அடிமையாவதும், அதனைத்தொடர்ந்து உட்கொள்வதும் புற்றுநோயின் விகிதத்தை அதிகரிக்கிறது.

இது எல்லோருக்கும் தெரியும். மதுபானத்திலும் 'உடல் நலத்திற்கு கேடு' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும், மக்கள் அதை உபயோகித்து வருகின்றனர். இதுகுறித்து விழிப்புணர்வு வர வேண்டும். இதனைப் புரிந்துகொண்டு இந்த குடிப்பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

மார்பக புற்றுநோய்: இவ்வாறு மது அருந்துவதால் உடம்பில் வயிற்று புற்றுநோய், கணையம், ஈரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளையும் பாதிக்கிறது. இதில் இருந்து வரும் நச்சு கசிவுகள் மற்ற உறுப்புகளையும் சென்றடைந்து, மார்பக புற்றுநோய் (Breast cancer) வருகிறது. அதனால், தயவு செய்து மது குடிப்போர் இந்த குடிப்பழகத்தை தவிர்க்கவும்' என்று வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: நீரிழிவு நோய்க்கு குட் பை..! இதோ பக்க விளைவுகள் இல்லா சித்த மருந்துகள்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.