ETV Bharat / state

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 27, 2023, 7:58 AM IST

Vijayakanth: கடந்த 11ஆம் தேதி பூரண உடல்நலம் பெற்றுவிட்டதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு திரும்பிய நிலையில் மீண்டும் நேற்று மருத்துவமனையில் அனுமதி்க்கபட்டுள்ளார்.
vijayakanth health latest news in tamil
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: கடந்த சில வருடங்களாகவே நடிகர் விஜயகாந்த் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கபட்டிருந்தார். இதனால் பொது நிகழ்ச்சி, கட்சி பொது கூட்டங்கள் பங்கு பெறுவது என எந்த நிகழ்வுகளிலும் அவர் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் தேமுதிக நிறுவனரும், முன்னாள் நடிகர் சங்கத் தலைவருமான நடிகர் விஜயகாந்த் கடந்த மாதம் சளி, இருமல் மற்றும் தொண்டை வலி போன்ற பிரச்சனைகளால் மருத்துவ பரிசோதனைக்காக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சளி மற்றும் இருமல் அதிகமாக இருப்பதால் ஒரு சில தினங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்புவார் என மருத்துவமனை தரப்பிலிருந்து மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டது.

கடந்த நவம்பர் 23ஆம் தேதி மியாட் மருத்துவமனை தரப்பிலிருந்து விஜயகாந்த் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், அவர் மருத்துவ சிகிச்சைக்கு நன்றாக ஒத்துழைப்பதாகவும் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. மேலும் தேமுதிக பொருளாரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்தும் அவரது உடல் நிலை குறித்தான தகவல்களை அவ்வபோது வீடியோ மூலமாக வெளியிட்டிருந்தார்.

பின்னர் கடந்த 29ஆம் தேதி மியாட் மருத்துவமனை விஜயகாந்தின் உடல் நிலை குறித்த வெளியிட்ட அறிக்கையில், ”நுரையீரலில் சளி அதிகமாக சேர்ந்துள்ளதால் அவர் மேலும் 14 நாட்கள் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் எனவும், அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும்” குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து விஜயகாந்த் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு பொய்யான தகவல்கல் பரவ தொடங்கியது.

இதைத்தொடர்ந்து மியாட் மருத்துவமனை தரப்பிலிருந்து கடந்த 11ஆம் தேதி காலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண உடல்நலம் பெற்று வீடு திரும்பினார் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், சிகிச்சை முடிந்த வீடு திரும்பிய விஜயகாந்த் தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றார்.

பின்னர் 15 நாட்களுக்கு பிறகு நேற்று வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார் எனவும், அவர் பூரண உடல் நலத்துடன் உள்ளார். மேலும், பரிசோதனை முடிந்தப் பின், நாளை மறுநாள் வீடு திரும்புவார் எனவும் தேமுதிக தலைமை அலுவலகம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அங்கித் திவாரியைக் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டம்.. !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.