ETV Bharat / state

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ‘கஸ் கஸ்’ விலங்குகள் மீண்டும் அனுப்பி வைப்பு

author img

By

Published : Oct 26, 2022, 7:41 AM IST

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட கஸ் கஸ் என்னும் அரிய வகை விலங்குகள் மீண்டும் தாய்லாந்திற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ‘கஸ் கஸ்’ விலங்குகள் தாயகத்திற்கே அனுப்பி வைப்பு
தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ‘கஸ் கஸ்’ விலங்குகள் தாயகத்திற்கே அனுப்பி வைப்பு

சென்னை: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அலுவலர்கள் வழக்கம்போல் சோதனையிட்டனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அவரை நிறுத்தி அவரது உடைமைகளை சோதித்தனர். அப்போது அவரது பையில் ஏதோ லேசாக அசைவதுபோல் தெரிந்தது. இதனையடுத்து அந்த பையைத் திறந்து பாா்த்த சுங்கத்துறையினர், அதனுள் 5 அரிய வகை வெளிநாட்டு விலங்குகள் உயிருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கடத்தி வரப்பட்ட ‘கஸ் கஸ்’ விலங்கு
கடத்தி வரப்பட்ட ‘கஸ் கஸ்’ விலங்கு

இது தொடர்பாக அப்பயணியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘இது ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அபூர்வ வகை விலங்குகள். இதை நான் வளர்ப்பதற்காக எடுத்து வந்திருக்கிறேன்’ என கூறியுள்ளார். ஆனால் அவரிடம் அந்த விலங்குகளுக்கான எந்த ஆவணங்களும் இல்லை.

இவ்வாறு வெளிநாட்டிலிருந்து விலங்குகளை கொண்டு வரும்போது, அந்த விலங்குகளை மருத்துவ பரிசோதனை செய்ததற்கான சான்றிதழ் இருக்க வேண்டும். மேலும் இதற்காக சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறையிடம் தடையில்லா சான்றிதழ் பெற்று, இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு இந்திய வனவிலங்குத் துறையிடமும் அனுமதி பெற்று, அதற்கான சான்றிதழ்களும் வைத்திருக்க வேண்டும் என்பது விதி.

ஆனால் இவை இரண்டும் அப்பயணிடம் இல்லாததால், இதுகுறித்து சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஒன்றிய வனவிலங்கு குற்றப்பிரிவு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விமான நிலையம் வந்த வனவிலங்கு குற்றப்பிரிவு அலுவலர்கள், “இந்த விலங்குகள் ஆப்பிரிக்கா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் உள்ள தேவாங்கு ரகத்தைச் சோ்ந்த அபூர்வ வகை விலங்குகள்.

இதை ஆங்கிலத்தில் 'கஸ் கஸ்' (CUS CUS) என்று கூறுவாா்கள். மேலும் இதனால் வெளிநாட்டு நோய்க்கிருமிகள் நம் இந்தியாவுக்குள் பரவி விடும். இதை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும்” என உத்தரவிட்டனர். இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ஐந்து அபூர்வ வகை விலங்குகளையும், அவை கொண்டு வரப்பட்ட அதே தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்திலேயே சென்னையில் இருந்து தாய்லாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

இதற்கான செலவுத்தொகை அனைத்தையும் விலங்குகளை கடத்தி வந்த சென்னை பயணியிடம் இருந்தே வசூல் செய்யவும் அலுவலர்கள் முடிவு செய்தனர். மேலும் விலங்குகளை கடத்தி வந்த பயணியை கைது செய்த சென்னை விமான நிலைய சுங்கத்துறையினா், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் டிரான்ஸ்பார்மரில் இருந்து 2.195 கிலோ தங்கம் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.