சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி, கேளம்பாக்கம் மேகநாதீஸ்வரர் கோயிலில் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் இசைக்கலைஞர் டிரம்ஸ் சிவமணியும் பங்கேற்றார். விழா முடிந்து அதிகாலை வீடு திரும்பிய மயில்சாமி, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் மயில்சாமியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். நடிகர் ரஜினிகாந்த் இன்று (பிப்.20) நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நானும் மயில்சாமியும் நெடுங்கால நண்பர்கள். நாங்கள் இருவரும் சந்திக்கும் போது எம்ஜிஆர், சிவன் பற்றி மட்டுமே பேசுவார். கடைசியாக அவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது என்னால் பேச முடியவில்லை. மயில்சாமியின் ஆசையை நிறைவேற்றுவேன்" என கூறினார்.
மயில்சாமி சிவ பக்தர் என்பதால், அவரது இறுதி ஊர்வலம் தொடங்கும் முன் சிவனடியார்கள், சண்டி மேளம் இசைத்து சிவ புராணம் பாடினர். பின்னர் வீட்டில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இதில் நடிகர்கள் ஆதி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் மயில்சாமியின் உடல், ஏவிஎம் மயானத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு மகன்கள் இறுதிச்சடங்குகளை செய்தனர். பின்னர் உடல் தகனம் செய்யப்பட்டது.