சென்னை: தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களில் புதிதாக ஒருவருக்கும் கரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை எனவும், பரிசோதனை செய்பவர்களில் பாதிப்பவர்கள் எண்ணிக்கை மாநில அளவில் 0.2% என உள்ளது எனவும், கடந்த 24 மணி நேரத்தில் 70 பேருக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகச் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
பொதுச்சுகாதாரத்துறை இயக்குநரகம் மார்ச் 17ஆம் தேதி வெளியிட்டுள்ள தகவலில், 'தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 37 ஆயிரத்து 357 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் 70 நபர்கள் மேலும் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுப்பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 39 லட்சத்து 80 ஆயிரத்து 277 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 34 லட்சத்து 52 ஆயிரத்து 215 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 796 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
குணமடைந்தோரின் விவரம்
மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 146 பேர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் சேர்ந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 13 ஆயிரத்து 394 என உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பினால் இறப்பு இல்லாமல் இருந்த நிலையில் இன்று மேலும் தனியார் மருத்துவமனையில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளார். இவருடன் சேர்த்து இறந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 25 என உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னையில் 20 நபர்களுக்கும் செங்கல்பட்டில் 11 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 5 நபர்களுக்கும், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் நான்கு நபர்களுக்கும் என அதிக அளவில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:குறைந்தது ஆர்டி-பிசிஆர் கட்டணம்!