ETV Bharat / state

ஆன்டிபயாடிக் மருந்துகளின் விலை அதிகமாக உள்ளது - உலக சுகாதார மாநாட்டில் அமைச்சர் பேச்சு

author img

By

Published : Nov 8, 2022, 5:47 PM IST

டெல்லியில் நடந்த 7ஆவது சுகாதார மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆன்டிபயாடிக் மருந்துகளின் விலை அதிகமாகவும், மக்களால் எளிதில் வாங்க முடியாதவையாகவும் உள்ளது எனக் கூறியுள்ளார்.

Etv Bharatஆன்டிபயாடிக் மருந்துகளின் விலை அதிகமாக உள்ளது - உலக சுகாதர மாநாட்டில்   மா.சுப்ரமணியம்
Etv Bharatஆன்டிபயாடிக் மருந்துகளின் விலை அதிகமாக உள்ளது - உலக சுகாதர மாநாட்டில் மா.சுப்ரமணியம்

டெல்லியில் நடைபெற்ற 2022ஆம் ஆண்டிற்கான 7ஆவது உலக சுகாதார மாநாட்டில் கலந்துகொண்ட தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 'நுண்ணுயிர் எதிர்ப்பு பாதை' (தென்கிழக்கு ஆசியாவில் தொற்று நோய்கள் அச்சுறுத்தல்கள்) எனும் நோக்கத்தின்கீழ் பேசும்போது, 'உலகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒட்டுமொத்த மனிதகுலமும் கோவிட் 19 பெருந்தொற்று பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாகவும், தற்போதுள்ள போக்குவரத்து மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தினால் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்கள் மீண்டும் மீண்டும் ஏற்படுவதைத்தவிர்க்க இயலாத நிலை உள்ளது. இதுபோன்ற தொற்றுநோயைக்கண்காணிக்க, எச்சரிக்கை மற்றும் நிர்வகிப்பதற்கு பிராந்திய, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான ஒத்துழைப்புடன் கூடிய ஒரு வழிமுறையை நாம் உருவாக்க வேண்டும்.

மேலும், ஜுனோசிஸ் என்பது மனிதரல்லாத விலங்கிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் தொற்று நோயாகும். ஜுனோடிக் நோய்க்கிருமிகள் பாக்டீரியா, வைரஸ் அல்லது ஒட்டுண்ணியாக இருக்கலாம் அல்லது வழக்கத்திற்கு மாறான காரணிகளை உள்ளடக்கியிருக்கலாம். நேரடி தொடர்பு அல்லது உணவு, நீர் அல்லது சுற்றுச்சூழலின் மூலம் மனிதர்களுக்குப் பரவலாம். ஜுனோஸிஸ் புதிதாக அடையாளம் காணப்பட்ட அனைத்து தொற்று நோய்களிலும், ஏற்கெனவே உள்ள பல நோய்களிலும் பெரும் சதவீதத்தை உள்ளடக்கியுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில், மனிதர்கள் மற்றும் கால்நடைகள் ஆகிய இரண்டின் மீதான நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து வகை பயன்பாடு, மற்றும் தவறாகப்பயன்படுத்துதல் ஆகியவை நோய்க்கிருமிகளிடையே பெரிய அளவிலான ஆன்டிபயாடிக் மருந்து எதிர்ப்பை ஏற்படுத்துகிறது. ஆன்டிபயாடிக் மருந்து எதிர்ப்பு என்பது பொதுவாக பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதியாக காலப்போக்கில் நடக்கும் மரபணு மாற்றங்கள் ஆகும்.

மேலும், ஆன்டிபயாடிக் மருந்து எதிர்ப்பு, குறிப்பாக பாக்டீரியா எதிர்ப்பு என்பது சுகாதார நடைமுறைகள், தொழில், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு முறைகளின் மூலம் நடைபெறுகின்றது. ஆன்டிபயாடிக் மருந்துகளின் நுகர்வு அதிகரித்து வருவது ஆன்டிபயாடிக் மருந்து எதிர்ப்பின் முக்கியக்காரணிகளில் ஒன்றாகும். ஆன்டிபயாடிக் மருந்துகளின் பகுத்தறிவற்ற பயன்பாடு, விற்பனை தொடர்பான மோசமான விதிமுறைகள், சுய மருந்து மற்றும் கல்வியின்மை பற்றிய விழிப்புணர்வு ஆகியவை உலகம் முழுவதும் நுண்ணுயிர் எதிர்ப்பிற்கு காரணமாக உள்ளது.

ஆன்டிபயாடிக் மருந்துகளின் விலை அதிகமாக உள்ளது - உலக சுகாதர மாநாட்டில்   மா.சுப்ரமணியம்
ஆன்டிபயாடிக் மருந்துகளின் விலை அதிகமாக உள்ளது - உலக சுகாதார மாநாட்டில் அமைச்சர் பேச்சு

அதிகப்படியான ஆன்டிபயாடிக் பயன்பாட்டைக்கட்டுப்படுத்துதல், கால்நடைகளின் வளர்ச்சி ஊக்கிகளாக ஆன்டிபயாடிக் பயன்பாட்டைக்கட்டுப்படுத்துதல், மருத்துவமனை மற்றும் சமூகத்தில் ஆன்டிபயாடிக் பயன்பாடு உள்ளிட்ட மருந்து தணிக்கை, மருந்து-விழிப்புணர்வு தொடர்பான வழிகாட்டுதல்கள் ஆகியவையே இன்றைய காலத்தின் தேவையாகும். ஆன்டிபயாடிக் மருந்து எதிர்ப்பு என்பது உலகம் முழுவதும் பெரும் பொது சுகாதார அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாகவும், பல மருந்து எதிர்ப்பு பாக்டீரியா மற்றும் பான் மருந்து எதிர்ப்பு பாக்டீரியா ஆகியவை, இதன் மூலமாக மருந்தை எதிர்க்கும் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்த்தொற்றுகளால் உருவாகின்றன.

மருந்துகளை எதிர்க்கும் புதிய நுண்ணுயிரிகளுக்கு எதிராக செயல்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளின் விலை அதிகமாகவும், பெரும்பாலான மக்களால் வாங்க முடியாதவையாக உள்ளது. இது தவிர, முறையற்ற ஆன்டி மைக்ரோபியல் பயன்பாடும் சிக்கலை ஏற்படுத்துகிறது.

எனவே, மருத்துவ நிறுவனங்கள், மருத்துவர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு முறையான மருந்து தேர்வு, முறையான பரிசோதனை, சிகிச்சையின் காலம், தடுப்பூசிகள் மற்றும் விரிவான தொற்றுக் கட்டுப்பாட்டுத் திட்டங்களை கற்பிக்க வேண்டும். உலகெங்கிலும் உள்ள பொது சுகாதார நிறுவனங்களில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் பல மருந்து எதிர்ப்பு உருமாற்ற நுண்ணுயிரிகள் வெளிப்படுவது தடுக்கப்பட வேண்டும்.

இதற்கு சிறந்த புரிதல், கூடுதல் ஆராய்ச்சி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு கண்காணிப்பு ஆராய்ச்சி மற்றும் மேலாண்மைக்கான பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் நிதியுதவி ஆகியவற்றில் உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவை தேவைப்படுகிறது. ஆண்டிபயாடிக் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட திட்டங்கள், பொதுவாக “ஆன்டி-மைக்ரோபியல் ஸ்டீவர்ட்ஷிப் திட்டம்” எனக் குறிப்பிடப்படுகிறது.

இத்திட்டம் இந்தியாவில் நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பின் தரத்தை மேம்படுத்துவதில் உதவிகரமாக இருப்பதுடன், தமிழ்நாட்டில் மருத்துவமனைகளில், மருத்துவமனை தொற்று கட்டுப்பாட்டுக் குழுவால் செயல்படுத்தப்படுகின்றது.

எனவே, நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை பொறுப்புடன் பயன்படுத்துவது மட்டுமே எதிர்கால சந்ததியினர் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் பலனை அனுபவிக்க உதவுவதாகவும், இந்த மாநாடு முக்கியமான உலகளாவிய பிரச்னை குறித்த விழிப்புணர்வை மேலும் அதிகரிக்கவும், ஆன்டிபயாடிக் எதிர்ப்பு நுண்ணுயிரிகளின் வெளிப்பாட்டைக் குறைக்கவும் உதவும்’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:பள்ளி தோழனை தேடி வந்த மாஜி துணை ஜனாதிபதி.. சென்னையில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.