ETV Bharat / state

கரோனா 2 ஆவது அலை: தீவிரமாகக் களத்தில் இறங்கிய இந்திய மருத்துவம்

author img

By

Published : Apr 16, 2021, 8:58 AM IST

Updated : Apr 18, 2021, 12:38 PM IST

சென்னை: கரோனா இரண்டாவது அலை தமிழ்நாட்டில் வேகமெடுத்துள்ள நிலையில், மீண்டும் தீவிரமாகக் களத்தில் இறங்கிய இந்திய மருத்துவம் குறித்த செய்திச் தொகுப்பு.

தீவிரமாகக் களத்தில் இறங்கிய இந்திய மருத்துவம்
தீவிரமாகக் களத்தில் இறங்கிய இந்திய மருத்துவம்

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் தீவிரமாக அதிகரித்துவருகிறது. இதனால், மருத்துவமனைகள் நிரம்பி வழிய தொடங்கியுள்ளது. தனிமைப்படுத்தும் மையங்களில் படுக்கைகளை மக்கள் நல்வாழ்வுத் துறையும், உள்ளாட்சித் துறையும் இணைந்து ஏற்படுத்திவருகின்றன.

கரோனா தாக்கம் முதல் அலையின்போது பாதிப்புகளின் வீரியத்தைக் குறைப்பதற்காக இந்திய மருத்துவம், ஒமியோபதித் துறையின் மூலம் சித்த வைத்தியத்தில் கபசுரக் குடிநீர் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா, மூச்சுப்பயிற்சி அளிக்கப்பட்டன.

இதனால், நோயினால் பாதிக்கப்பட்டவர் இறப்பு எண்ணிக்கை குறைய பயனாக இருந்தது. மேலும், கரோனா தொற்று தாக்குதல் ஏற்படாமல் இருப்பதற்காக நோய் எதிர்ப்புச் சக்தியை அளிப்பதற்கான மருந்தும் தயாரித்து வழங்கப்பட்டன.

கபசுரக் குடிநீர் பயன்களை விளக்கும் காணொலி

இந்நிலையில், கரோனா தொற்று 2ஆவது அலை தமிழ்நாட்டில் மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் மீண்டும் சித்த மருத்துவர்கள் நியமனம்செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. கபசுரக் குடிநீர், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பவுடர் ஆகியவை தயாரிக்கும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இந்திய மருத்துவம் மற்றும் ஒமியோபதித் துறையின் இயக்குநர் கணேஷ் கூறும்போது, “கரோனா தொற்று இரண்டாவது அலை தற்போது தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ளது. முதல் அலையில் சித்த மருத்துவம், மருத்துவர்களைப் பயன்படுத்தி சிகிச்சையளித்தோம்.

அதேபோல் மீண்டும் இரண்டாவது அலையில் சிகிச்சையளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கபசுரக் குடிநீர், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் குடிநீர் ஆகியவையும் தயார்செய்யப்பட்டு, மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது” எனக் கூறினார்.

மேலும், இது குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஒமியோபதித் துறையின் இணை இயக்குநர் பார்த்திபன் கூறும்போது, “கரோனா நோயாளிகளுக்கு அளிப்பதற்காக ஆடாதொடை, அக்ரகாரம், கற்பூரவள்ளி, திப்பிலி, கோரைக்கிழங்கு, கோஸ்டம், சுக்கு, தடுக்காய்த் தேரல், முள்ளி, இலவங்கம், வட்டத்திருப்பி, சிறுகாஞ்சொறி, நிலவேம்பு, சிந்தில்கொடி, சிறுத்தேக்கு ஆகியவற்றை காயவைத்து பொடியாக்கி கபசுரக்குடிநீர் தயார் செய்யப்படுகிறது.

அதனை 5 கிராம் எடுத்து 240 மில்லி தண்ணீரில் கொதிக்கவைத்து 60 மில்லியாக சுருக்கி காலை மற்றும் மாலையில் 5 நாள்கள் அருந்தினால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இதனை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா சித்த மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டுவருகிறது.

மேலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும், கரோனா தொற்று குறைந்தபோது சிகிச்சை மையங்களின் எண்ணிக்கையைக் குறைத்தோம். தற்போது அதிகரித்துள்ளதால் மீண்டும் சிசிக்சை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம்” எனக் கூறினார்.

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மணவாளன் கூறும்போது, “கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் பயிற்சியளிக்கின்றனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா, நீராவிப் பிடித்தல் போன்ற சிகிச்சைகளை அளித்துவருகின்றனர். கரோனா இரண்டாவது அலை தொடங்கியிருப்பதால் அனைத்து மருத்துவமனைகள், ஏற்கனவே செயல்பட்ட இடங்களில் மீண்டும் தொடங்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன” என்றார்.

இதையும் படிங்க: கரோனா கட்டுப்பாடுகளால் சிறு தொழில் வியாபாரிகள் பாதிப்பு!

Last Updated : Apr 18, 2021, 12:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.