ETV Bharat / state

தமிழகம் முழுவதும் நாளை முதல் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை!

author img

By

Published : Jul 11, 2023, 12:59 PM IST

தமிழகம் முழுவதும் நாளை முதல் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை
தமிழகம் முழுவதும் நாளை முதல் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை

ரேஷன் கடைகளில் தக்காளி தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் விதமாக தமிழகம் முழுவதும் நாளை முதல் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத் துறை அறிவித்து உள்ளது.

சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை உச்சத்தை எட்டியது. குறிப்பாக, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 130 ரூபாய்க்கும், கொடைக்கானலில் 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரக்கூடிய தக்காளியின் வரத்து மழையின் காரணமாக குறைந்தது. இதனால், தக்காளி விளைச்சல் இல்லாமல், வரத்து குறைந்ததன் காரணமாகவே விலை கிடுகிடுவென உயர்ந்தது.

அன்றாட சமையல் பொருட்களில் முக்கியமாகக் கருதப்படும் காய்கறிகளில் ஒன்றான தக்காளியின் விலை உயர்வினால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். மேலும், தக்காளியின் விலையைக் குறைப்பதற்கு அரசிற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனால், தமிழ்நாட்டில் உள்ள 65 பசுமைப் பண்ணைகளில் கொள்முதல் விலைக்கே தக்காளியை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டது.

பசுமை பண்ணை காய்கறி அங்காடி, நடமாடும் காய்கறி அங்காடி மூலமாக கொள்முதல் விலைக்கே விற்க திட்டம் எனவும் தக்காளியைப் பதுக்கி வைப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்து இருந்தார். கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதி கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, திருவண்ணாமலை உள்ளிட்ட 62 இடங்களில் செயல்படும் பண்ணை பசுமைக் கடைகளில் ரூபாய் 60க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

ஆனால், தக்காளியின் வரத்து அதிகரித்து விலைக் குறைவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேலும் மேலும் விலை அதிகரித்துக்கொண்டே இருப்பதால் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு முடிவு எடுத்தது. இதனை அடுத்து ஜூலை 4 முதல் சென்னையில் ரேஷன் கடைகளில் தக்காளி ரூபாய் 60க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதில், வடசென்னையில் 32 கடைகளிலும், மத்திய சென்னையில் 25 கடைகளிலும், தென் சென்னையில் 25 கடைகளிலும் முதல் கட்டமாக தக்காளி ரூபாய் 60க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், ரேஷன் கடை மற்றும் பசுமை பண்ணை நுகர்வோர் கடைகள் உட்பட 110 கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது. ஒரு நபருக்கு ஒரு கிலோ தக்காளி வீதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தக்காளி வாங்குவதற்கு ரேஷன் அட்டை தேவையில்லை என்றும், கடையில் பில் வாங்கிக் கொண்டு தக்காளி வாங்கிக் கொள்ளலாம் என நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. ஒரு கடைக்கு 50 முதல் 100 கிலோ கொள்முதல் செய்யப்படுவதால் ஒரு மணி நேரத்தில் தக்காளி விற்பனையாகி தீர்ந்தது.

இதனால், பொதுமக்கள் அனைவருக்கும் தக்காளி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ரேஷன் கடைகளில் தக்காளி கொள்முதலை உயர்த்தக் கோரியும், ரேஷன் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கோரியும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக நேற்றைய (ஜூலை 10) தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டுறவுத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த நிலையில், பொதுமக்கள் நலன் கருதி தமிழகம் முழுவதும் உள்ள 300 ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூட்டுறவுத் துறை அறிவித்து உள்ளது.

இதையும் படிங்க: தக்காளி விலையை கட்டுப்படுத்திய தேனி நிர்வாகம்! கிலோ 82 ரூபாய்க்கு விற்பனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.