சென்னை கோயம்பேடு லெமன் மார்க்கெட் அருகே நேற்று மதியம் போதையில் இருவர் இடையே ஏற்பட்ட சண்டையிடல் கீழே விழுந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இறந்து கிடந்தவரின் சடலம் அருகே அமர்ந்திருந்த எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபாவை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். இதனையடுத்து சம்பவ இடத்தில் பார்த்தவர்கள் கூறிய சாட்சிகளின் அடிப்படையில் கோயம்பேடு காவல்துறையினர் பிரான்சிஸ் கிருபா மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், சம்பவ இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளில் பிரான்சிஸ் கிருபா மடியில் கொலையுண்ட நபர் படுத்து கிடப்பதாகவும் பதிவாகி உள்ளது. இதனை தொடர்ந்து உயிரிழந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்தது. மனநலம் பாதிக்கப்பட்ட நபர், அவராக உயிரிழந்தாரா? அல்லது பிரான்சிஸ் கிருபாதா கொலை செய்தாரா? என்பது குறித்து காவல்துறையினரால் தெளிவான முடிவெடுக்க முடியாமல் திணறினர். மேலும், இறந்த நபர் வடமாநிலத்தவர் என்றும் அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால் இந்த வழக்கை விசாரிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனையின் முடிவை பொறுத்தே இந்த வழக்கில் கொலையா அல்லது வேறு ஏதேனும் நோயின் காரணமாக உயிரிழந்தாரா என்ற முடிவுக்கு வர முடியும் என கோயம்பேடு காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா விடுதலை செய்யப்பட்டுள்ளார். இறந்தவர், மாரடைப்பு ஏற்பட்டு, வலிப்பு நோயால் உயிரிழந்தது உடற்கூறாய்வில் தெரியவந்துள்ளது. வலிப்பு ஏற்பட்டபோது எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா இரும்புக் கம்பியை கொடுத்து காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். சிசிடிவியில் அடையாளம் தெரியாத அந்த நபருக்கு எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா உதவி செய்யும் காட்சிகள் 20 நிமிடங்கள் பதிவாகியுள்ளன. அதை ஆய்வு செய்தபிறகே பிரான்சிஸ் கிருபா கொலை செய்யவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.