ETV Bharat / state

பருத்தி நூல் விலை உயர்வு - கனிமொழி தலைமையில் எம்.பி.க்கள் ஒன்றிய அமைச்சர்களை நேரில் சந்தித்து வலியுறுத்த திட்டம்!

author img

By

Published : May 17, 2022, 5:51 PM IST

பருத்தி நூல் விலை உயர்வை உடனடியாகத் தடுத்திட நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியிருந்த நிலையில், நாளை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய அமைச்சர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்குமாறும் முதலமைச்சர் அறிவுறுத்தியிருக்கிறார்.
பருத்தி நூல் விலை உயர்வை தடுத்திடக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
பருத்தி நூல் விலை உயர்வை தடுத்திடக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

நெசவாளர்கள் பிரச்னைக்கு உடனடித் தீர்வு காண திமுக நாடாளுமன்ற குழு துணைத் தலைவர் கனிமொழி தலைமையில் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் உள்ள அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து சென்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலையும் நாளை நேரில் சந்தித்து வலியுறுத்த முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில், 'பருத்தி நூல் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பதால் தமிழ்நாட்டில் ஜவுளித்தொழிலும்- அதை நம்பியுள்ள நெசவாளர்களும், தொழிலாளர்களும் கடுமையான பிரச்னைகளை எதிர்கொண்டு வருவதை விரிவாகச் சுட்டிக்காட்டி- முதலமைச்சர் 'பருத்தி நூல் விலை உயர்வை உடனடியாகத் தடுத்திடவும், நெசவாளர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை விரைவில் களைந்திடவும்' மூன்று மிக முக்கியமான கோரிக்கைகளை முன் வைத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

அதில் மிக முக்கியமாக, தொழில் துறையிலும், நெசவாளர்கள் மத்தியிலும் அதிகரித்து வரும் அதிருப்தி கவலையளிப்பதாகவும், பிரதமர் அவர்கள் உடனடியாக தலையிட்டு இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் நெசவாளர்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பு அவர்களைத் தொடர் போராட்டத்திற்கு வித்திட்டுள்ளது. ஜவுளித் தொழிலில் ஒரு அசாதாரணமான சூழல் உருவாகியிருக்கிறது.

ஆகவே, இவற்றையெல்லாம் மனதில் கொண்டு திமுக நாடாளுமன்றக் குழு துணைத் தலைவர் கனிமொழி தலைமையில் மேற்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து சென்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலையும் நாளை (18.5.2022) சந்தித்து நெசவாளர்கள் பிரச்னைக்கு உடனடித் தீர்வு காண வேண்டும்' என்று நேரில் வலியுறுத்துமாறு முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார்.

நெசவாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறவும், அவர்களின் இன்னல்களை நீக்கவும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, ஒன்றிய அரசினையும் தொடர்ந்து வலியுறுத்தும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னைவாசிகளுக்கு இன்பச்செய்தி! துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட சாலை ஒப்பந்தம் கையெழுத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.