ETV Bharat / state

உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் -பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

author img

By

Published : Jul 24, 2022, 5:46 PM IST

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் குறித்து முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம்
உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் குறித்து முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம்

சென்னை: இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் நிலை குறித்து மக்களவையில் சமீபத்தில் அளிக்கப்பட்ட பதிலால் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கவலையை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

மேலும், அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தெளிவுபடுத்தியபோது, ​​“வெளிநாட்டு மருத்துவ மாணவர்களை இடமாற்றம் செய்யவோ அல்லது தங்க வைக்கவோ தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) எந்த அனுமதியும் வழங்கவில்லை," என தெரிவித்துள்ளார்.

ஒரு மாநிலத்தில் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளின் குறிப்பிட்ட சூழலில் இந்த பதில் அளிக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் அறிந்திருந்தாலும், இது மாணவர்களின் நிச்சயமற்ற எதிர்காலத்தை மீண்டும் ஒருமுறை நினைவுக்கு கொண்டு வந்துள்ளது என்பதை நான் முன்னிலைப்படுத்த விரும்புகிறேன்.

உக்ரைன்-ரஷ்யா மோதலின் தொடக்கத்திலிருந்து, உக்ரைனில் இருந்து சுமார் 2000 மருத்துவ மாணவர்கள் தமிழ்நாட்டிற்குத் திரும்பியுள்ளனர், இது நம் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மிகப்பெரிய எண்ணிக்கையில் ஒன்றாகும்.

உக்ரைனின் தற்போதைய சூழ்நிலையில், இந்த மருத்துவ மாணவர்கள் உடனடியாக உக்ரைனில் உள்ள தங்கள் கல்லூரிகளுக்குத் திரும்புவது நடைமுறையில் சாத்தியமற்றதாக இருக்கலாம் மற்றும் போர் நிறுத்தப்பட்ட பின்னரும் நிச்சயமற்ற தன்மை நிலவும்.

இதைக் கருத்தில் கொண்டு, இந்த மாணவர்களை இந்தியாவிலோ அல்லது வெளிநாடுகளில் உள்ள பொருத்தமான பல்கலைக்கழகங்களிலோ தங்க வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழகம் உங்களைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து மாணவர்களை வெளியேற்றுவதற்கு மத்திய அரசு எடுத்த உடனடி நடவடிக்கைகளை நாங்கள் ஒப்புக்கொண்டாலும், அவர்களின் படிப்பைத் தொடர்வதற்கு மத்திய அரசு அத்தகைய உறுதியான நடவடிக்கைகளை எடுக்காததால் மாணவர்கள் மத்தியில் ஏமாற்றம் உள்ளது.

எனவே, இவற்றைச் செயல்படுத்த, சம்பந்தப்பட்ட மத்திய சட்டங்களில் தேவையான திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு, NMC மற்றும் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்களுக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மாணவர்கள் இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிப்பைத் தொடர வேண்டும். இந்தத் தீர்வு கடினமானதாக கருதப்பட்டால், இந்த மாணவர்களுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிப்பைத் தொடர மாற்று வழியை வழங்க தேவையான நடவடிக்கைகள் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும்.

ஏற்கனவே ஏற்பட்டுள்ள காலதாமதத்தை கருத்தில் கொண்டு, இவ்விஷயத்தில் தங்களின் அவசர தலையீட்டை கோருகிறேன். இந்த பிரச்னையில் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழக அரசு முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்று உறுதியளிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மாணவர்களின் குறைகளை ஆன்லைன் மூலம் கேட்க நடவடிக்கை: அன்பில் மகேஷ் பொய்யாமொழி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.