ETV Bharat / state

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: FIDE கொடி ஹங்கேரியிடம் ஒப்படைப்பு!

author img

By

Published : Aug 10, 2022, 6:53 AM IST

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவில் FIDE கொடி, அடுத்த செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ள ஹங்கேரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: FIDE கொடி ஹங்கேரியிடம் ஒப்படைப்பு!
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: FIDE கொடி ஹங்கேரியிடம் ஒப்படைப்பு!

சென்னை: 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 186 நாடுகளில் இருந்து வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் 30 வீரர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 9) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அப்போது சிறுவர் - சிறுமியர்களின் ரூபிஸ் கியூப் சால்வ் செய்த நிகழ்ச்சி நடைபெற்றது.

டிரம்ஸ் சிவமணியின் அரங்கேற்றம்
டிரம்ஸ் சிவமணியின் அரங்கேற்றம்

தலைவர்களின் கானொலிகள்: அடுத்ததாக டிரம்ஸ் சிவ மணியின் டிரம்ஸ், ராஜேஷ் வைத்தியாவின் வீணை, புல்லாங்குழல் கலைஞர் நவீன், ஸ்ட்பென் தேவசியின் கீ போர்ட் ஆகியோர் சேர்ந்து 'ஹார்ட் பீட்ஸ் ஆஃப் இந்தியா' என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

சுதந்திரப் போராட்ட தியாகிகள், கட்டபொம்மன், பெரியார், காயிதே மில்லத், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், காமராஜர் உள்ளிட்டோரின் புகைப்படங்களும், முன்னாள் முதலமைச்சர்களான ராஜாஜி முதல் முதல் ஜெயலலிதா வரை அனைவரின் படமும் விழா மேடையில் டிஜிட்டல் திரையில் காண்பிக்கப்பட்டது.

பதக்கங்களை பெற்ற அணிகளுடன் குழு புகைப்படம்
பதக்கங்களை பெற்ற அணிகளுடன் குழு புகைப்படம்

மேலும் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ராஜாஜி, காமராஜர், அண்ணா படங்கள், கருணாநிதி சமூக நீதிக்காகவும் சமத்துவத்திற்கு பாடுபட்டவர் எனவும், எம்ஜிஆர் அவரது மதிநுட்பத்திற்கு அறியப்பட்டவர் எனவும், ஜெயலலிதா பெண் குழந்தைகளுக்கான முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர் எனவும் காணொலி காட்சி மூலம் விளக்கப்பட்டது. தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவில், நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்.

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள்
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள்

பரிசும் பதக்கங்களும்: சிறந்த ஸ்டைலிஸ் அணியாக டென்மார்க் மகளிர் அணிக்கு பரிசு வழங்கப்பட்டது. சிறந்த சீருடை அணிந்த மகளிர் அணியாக உகாண்டா அணிக்கு பரிசு வழங்கப்பட்டது. சிறந்த சீருடை அணிந்த ஆண்கள் அணிகளாக மங்கோலியா, உஸ்பெகிஸ்தான் அணிக்கு பரிசு வழங்கப்பட்டது.

மேலும் சிறந்த ஆடை அணிந்த அணிகளாக இந்தியா, இங்கிலாந்து, அங்கோலா, சுவிட்சர்லாந்து ஆகிய அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஓப்பன் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற உஸ்பேகிஸ்தான், வெள்ளிப்பதக்கம் வென்ற அர்மேனியா மற்றும் வெண்கலப்பதக்கம் வென்ற இந்தியா ஆகிய நாடுகளின் அணி வீரர்களுக்கு பதக்கங்களை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய வீரர்கள் குகேஷ் மற்றும் நிஹல் சரின் தங்கம் வென்றனர். ஓப்பன் மற்றும் பெண்கள் பிரிவில் சிறப்பாக விளையாடிய இந்திய ஏ அணிக்கு "நானோ கப்ரிந்தஷ்விலி" கோப்பை வழங்கப்பட்டது. அனைத்து பிரிவிலும் சிறப்பாக விளையாடிய ஒருங்கிணைந்த கோப்பையை முதலமைச்சர் ஸ்டாலின் இந்திய அணிக்கு வழங்கினார்.

செஸ் கொடி ஒப்படைப்பு: தொடர்ந்து பேசிய தமிழ்நாடு அரசு தலைமைச்செயலர் இறையன்பு, “செஸ் போட்டி என்பதைவிட செஸ் திருவிழா என்று கூற வேண்டும். இது போன்ற பிரம்மாண்ட முறையில் கலை நயமிக்க செஸ் போட்டி தமிழ்நாட்டை தவிர வேறு எங்கும் நடைபெறவில்லை. தற்போதைய தலைமுறை ஆன்லைனில் மூழ்கி கவனச்சிதறலில் உழன்றுள்ளனர்.

இதில் இருந்து மீண்டு வர செஸ் உதவும். செஸ் மற்றும் வாழ்க்கையும் பிரிக்க முடியாது. ஞாபக சக்தியை மேம்படுத்தும். செஸ் விளையாட்டை பாடப்புத்தகத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும்” என தெரிவித்தார்.

இதனையடுத்து 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தீபம் அணைக்கப்பட்டு, 45 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவிருக்கும் ஹங்கேரி நாட்டிடம் FIDE கொடி ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிங்க: கோவையில் செஸ் போர்டு போன்ற உடை அணிந்த யானைகளின் அணிவகுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.