ETV Bharat / state

நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

author img

By

Published : May 7, 2023, 2:29 PM IST

தமிழ்நாட்டில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாகவும், 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வடக்கு தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று (மே 7) ஒரு வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக அப்பகுதிகளில் நாளை (மே 8) ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். இது நாளை மறுநாள் (மே 9) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடக்குத் திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக் கூடும்.

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். முக்கியமாக தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதனையடுத்து நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். தொடர்ந்து வருகிற 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகியப் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகியப் பகுதிகளில் இன்று முதல் வருகிற மே 11ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை, படிப்படியாக 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் உயரக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். மேலும், இன்று மற்றும் நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும்.

தொடர்ந்து நாளை மறுநாள் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும்.

அதேபோல் வருகிற 10 மற்றும் 11ஆகிய தேதிகளில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும்.

எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அதேநேரம், ஆழ் கடலில் உள்ள மீனவர்கள் நாளைக்குள் கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Elephant video: 'இது எங்க ஏரியா உள்ளே வராத' - செல்லும் வழியில் நின்ற வாகன ஓட்டிகளைத் துரத்தியடித்த யானைகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.