ETV Bharat / state

'சென்னை குடிநீர் வாரியத்தால் தான் திமுக ஆட்சிக்கே அவப்பெயர்' - திமுக கவுன்சிலர்கள் வேதனை!

author img

By

Published : Jul 28, 2023, 8:37 PM IST

'பெருநகர மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள், குடிநீர் வாரியம் சரிவர செயல்படுவது இல்லை. சென்னை குடிநீர் வாரியத்தால் தான் திமுக ஆட்சிக்கே அவப்பெயர் ஏற்படுகிறது' என சென்னை மேயரிடம் குற்றம்சாட்டியுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மேயர் ஆர். பிரியா தலைமையில் இன்று (ஜூலை 28) ஜூலை மாதத்திற்கான மாநகராட்சி மன்றக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள் சென்னை மாநகராட்சிப் பள்ளிகள், அம்மா உணவகம், பூங்கா, சாலை, மழைநீர் வடிகால் பணிகள், மருத்துவமனை, சுகாதார நிலையங்கள் மற்றும் காலி இடங்களை உடனே நிரப்ப வேண்டும். மேலும், மண்டலத்திற்கு ஒரு பல் மருத்துவமனை, குப்பைகளை அள்ளும் வண்டிகளை சுத்தம் செய்தல், மழைநீர் வடிகாலில் இருக்கும் கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.

தொடர்ந்து பேசிய உறுப்பினர்கள், “திமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், சென்னையில் குடிநீர் வாரியம் மிக மோசமாக உள்ளது. பல இடங்களில் அதிகாரிகள் பற்றாக்குறை, களத்திற்கு அதிகாரிகள் வருவது கிடையாது, ஒப்பந்ததாரர்கள் தான் வருகின்றனர். சென்னை குடிநீர் வாரியத்தால் தான் திமுக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுகிறது” என பெரும்பாலான கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.

இதற்குப் பதிலளித்த மேயர் ஆர்.பிரியா, “குடிநீர் வாரியத்தால் சந்திக்கும் பிரச்னைகளை கடிதமாக கொடுங்கள், நான் இதனை சம்பந்தப்ப்பட்ட அதிகாரிகளிடம் முறையாகப் பேசுகிறன். விரைவில் குடிநீர் வாரியத்தின் இயக்குநர்களிடன் நான் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்க கூறுகிறேன்” எனக் கூறினார். பின்பு சில உறுப்பினர்கள் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால், மாணவர்களின் கல்வி, கற்றல் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இதற்குப் பதிலளித்த பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், "சென்னை மாநகராட்சியின் கல்வித்துறையில் 420 பள்ளிகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்து 33ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். மொத்தம் 4ஆயிரத்து 4 ஆசிரியர்கள் பணியிடங்கள் உள்ளன. புதியாக இணைக்கப்பட்ட பள்ளிகளில் இருந்த ஆசியர்கள் பொது கலந்தாய்வின் வாயிலாக 600 பேர் வேறு பள்ளிகளுக்குச் சென்று விட்டனர். தற்போது 167 காலியிடங்கள் உள்ளன. இவைகள் ஆகஸ்ட் மாத இறுதியில் நிரப்பப்படும்” எனத் தெரிவித்தார்.

மேலும், “சாலைகளில் பிறதுறை சார்ந்த பணிகளை மேற்கொள்வது உறுதி செய்தபின் அங்கு சாலை வேலைகள் தொடரும், கோரிக்கைளை ஆராய்ந்து அதனை விரைவில் சரிசெய்யப்படும்" எனவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வரிவிதிப்பு ஊக்கத் தொகை மற்றும் வட்டி திருத்தங்கள் உள்ளிட்ட 51 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆறு நிலைக்குழுக்களின் தலைவர்களுக்கு பணியின் காரணமாக இனவோ (Innova Car) வழங்குவதற்கு தீர்மாணம் ஒத்திவைக்கப்பட்டது. அப்போது மண்டலக் குழு தலைவர்கள் எழுந்து எங்களுக்கும் கார் வேண்டும் என்று மேயர் இடம் கோரிக்கை விடுத்தனர். அப்போது திமுக கவுன்சிலர்கள் சிலர் எழுந்து, தீர்மானம் பொருளில் வந்து விட்டால் அதை நிறைவேற்ற வேண்டும், என்று மேயர் இடம் முறையிட்டனர். இதற்குப் பதிலளித்த மேயர், “இது குறித்து ஆய்வு செய்து வரும் நாள்களில் நிறைவேற்றப்படும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் திமுக - அதிமுக இடையே வாக்குவாதம்: டென்ஷன் ஆன மேயர் பிரியா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.