ETV Bharat / state

அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

author img

By

Published : Nov 22, 2022, 3:17 PM IST

தமிழ்நாட்டில்  மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நேற்று (நவ.21) தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவ.22) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்து, மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழ்நாடு கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது.

இதன் காரணமாக, வடதமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் இன்று(நவ.22) பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 23, 24ஆகிய தேதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நவ.25, 26ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

இன்று(நவ.22) தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழ்நாடு-புதுவை கடலோரப்பகுதி மற்றும் மன்னார் வளைகுடா, இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தேர்தலின்போது முதுகெலும்பு;தேர்தலுக்குப்பின் விவசாயிகள் அடிமைகள் - அய்யாக்கண்ணு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.