சென்னை: கள்ளக்குறிச்சியில் சக்தி தனியார் பள்ளியில் நேற்று வன்முறை நடைபெற்றது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இன்று (ஜூலை 18) தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் சிபிஎஸ்இ, மெட்ரிக் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகள் மூடப்படும் என அறிவித்தனர்.
இந்நிலையில் தங்களின் அனுமதியில்லாமல் பள்ளிகளை மூடக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. பள்ளிகள் மூடப்பட்ட மற்றும் செயல்பட்ட தனியார் பள்ளிகளின் விவரங்களை மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில், ’திருநெல்வேலி, கரூர், அரியலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 100 விழுக்காடு பள்ளிகள் இன்று செயல்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள 11ஆயிரத்து 335 பள்ளிகளில் 987 பள்ளிகள் மட்டுமே செயல்படவில்லை. அந்த வகையில் தமிழ்நாட்டில் 91 விழுக்காடு பள்ளிகள் இயங்கியுள்ளன.
9 விழுக்காடு பள்ளிகள் மட்டுமே இயங்கவில்லை’ என்பது மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரக புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் : சிபிசிஐடி விசாரணை தொடங்கியது!