ETV Bharat / state

அதிமுக பொதுக்குழு வழக்குத் தொடர்பான தீர்ப்பின் முழு விவரம்

author img

By

Published : Aug 17, 2022, 8:50 PM IST

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தேர்தல் கூட்டணி, கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்த நிலையில், ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒற்றைத்தலைமை என்ற மனநிலைக்கு மாறியது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான தீர்ப்பின் முழு விவரம்
அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான தீர்ப்பின் முழு விவரம்

சென்னை: கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்குத் தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக இன்று சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில், “பொதுக்குழு என்பது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்ததுதான் என கட்சி சட்டவிதி உள்ளது.

தற்காலிக அவைத்தலைவர் எந்தச்சூழ்நிலையிலும் பொதுக்குழுவை கூட்ட முடியாது. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதாக இருந்தாலும், ஐந்தில் ஒரு பகுதியினர் ஒருங்கிணைப்பாளர் அல்லது இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்குத்தான் கோரிக்கை வைக்க முடியும்.

இந்த கூட்டத்தை கூட்ட அதிகாரம் இல்லாத அவைத்தலைவருக்குத்தான் ஐந்தில் ஒரு பகுதியினர் கடிதம் அனுப்பி உள்ளனர். ஒருங்கிணைப்பாளர் அல்லது இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு கடிதம் கொடுத்து, அதில் ஒருவர் மறுப்பு தெரிவித்தால்கூட, சட்ட விரோதமாக கூட்டத்தைக் கூட்ட முடியாது.

எனவே, ஜூலை 11 பொதுக்குழு தகுதியான நபராலோ அல்லது 15 நாட்கள் முன்னறிவிப்பு செய்தோ கூட்டப்படவில்லை. ஜூன் 23க்கு பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக கூறுவதற்கு எவ்வித அடிப்படை முகாந்திரமும் இல்லை. அது கற்பனையானது.

கட்சி விதிகளை மீறி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மூடி மறைக்கும் வகையில் பழனிசாமி தரப்பின் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகிவிட்டால், அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வகை செய்யும் விதிகள், எவ்விதத்திலும் தற்காலிக அவைத்தலைவர் பொதுக்குழுவைக் கூட்ட அனுமதி வழங்கவில்லை.

ஜூலை 11 பொதுக்குழுவுக்குத் தடைவிதிக்காவிட்டால், எடப்பாடி பழனிசாமி அவரது பதவியில் சவுகரியமாக அமர்ந்து விடுவார். மனுதாரர் ஓ.பி.எஸ், வைரமுத்து உள்ளிட்ட கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.

இரட்டைத்தலைமைக்குப்பதிலாக ஒற்றைத்தலைமைதான் வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை வைத்ததற்கு எவ்வித அடிப்படை புள்ளி விவரமும் இல்லை. இரட்டைத்தலைமையில்தான் நான்கரை ஆண்டுகளாக கட்சியை நடத்தியது மட்டுமல்லாமல், முதலமைச்சர், துணை முதலமைச்சர் போன்ற பதவிகள் மூலம் அரசையும் நடத்தி உள்ளனர்.

இருவரும் சேர்ந்துதான் கூட்டணி, வேட்பாளர் போன்றவற்றில் முடிவெடுத்து இருக்கிறார்கள். ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒற்றைத்தலைமை என்ற மனநிலைக்கு மாறியது எப்படி என கேள்வி எழுகிறது. கட்சித் தலைமை எடுக்கும் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது.

அதேசமயம் அந்த நடைமுறையில் மீறல் இருந்தால் நீதிமன்றத்தில் நிவாரணம் கோர எவ்வித தடையும் இல்லை. அதனால் ஜூலை 11 நடந்த பொதுக்குழு செல்லாது. செல்லாத அந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைத் தொடர அனுமதித்தால், கட்சித் தொண்டர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.

இரு தலைவர்களுக்கு இடையிலான பிரச்னை காரணமாக, உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தைப் பெற முடியாமல், இருந்தது. எனவே, ஜூன் 23-க்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும். இரு தலைவர்களின் ஒப்புதலும் இல்லாமல் எந்த பொதுக்குழு, செயற்குழுவும் கூட்டக்கூடாது.

ஒற்றைத்தலைமை குறித்து கட்சி விதிகளில் திருத்தம் செய்வது உள்ளிட்டவை குறித்து பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கூட்டத் தடையில்லை. ஐந்தில் ஒரு பகுதியினர் முறையாக கடிதம் கொடுத்து பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென கோரினால் ஒருங்கிணைப்பாளரோ இணை ஒருங்கிணைப்பாளரோ மறுக்கக் கூடாது.

ஒருவேளை இருவருக்கு இடையில் எந்த காரணத்திற்காகவோ பிரச்னை ஏற்பட்டால், பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்கும்படி நீதிமன்றத்தை நாடலாம். ஓ.பன்னீர்செல்வம், அம்மன் வைரமுத்து ஆகியோரின் மனுகள் முடித்து வைக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும்.. அவசியம் ஏற்பட்டால் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்... ஓபிஎஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.