ETV Bharat / state

பாஜகவில் இருந்து நடிகை கௌதமி விலகல்! - காரணம் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2023, 10:31 AM IST

Actress Gautami Tadimalla : பாஜக மூத்த நிர்வாகிகள் மீது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நடிகை கெளதமி, பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.

Actress Gautami Tadimalla
பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகை கௌதமி அறிவிப்பு

சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கௌதமி. சுமார் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பாஜகவில் இணைந்து கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் அன்பழகன் தனது சொத்து ஆவணங்கள், பணம் ஆகியவற்றை ஏமாற்றி மோசடி செய்து விட்டதாகவும், எனக்கு ஆதராவாக பாஜகவில் யாரும் இல்லை எனவும் ஆகையால் தான் பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து நடிகை கௌதமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கனத்த இதயத்துடனும், கடும் அதிருப்தியுடனும் பாஜகவில் இருந்து விலக முடிவு செய்திருக்கிறேன். இந்திய தேசத்தின் வளர்ச்சியில் என்னுடைய பங்கை அளிப்பதற்காக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் பாஜகவில் இணைந்தேன். என் வாழ்க்கையில் பல சவால்களை நான் சந்தித்தாலும், எனது பணியை நான் சிறப்பாக செய்து வந்தேன்.

தற்போது வரை என்னுடைய வாழ்க்கையில் பல கற்பனை செய்ய முடியாத சோகங்கள் உள்ளன. இந்நிலையில் கட்சியிடம் இருந்தோ, கட்சி தலைவர்களிடம் இருந்தோ எனக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. எனது நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிட்டு, என்னுடைய வாழ்க்கையில் நான் சம்பாதித்த சொத்துகளை ஏமாற்றிய நபருக்கு கட்சியில் சிலர் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருவது எனக்கு தெரிய வந்துள்ளது.

என்னுடைய 17 வயதில் இருந்து சினிமா, தொலைகாட்சி, வானொலி, டிஜிட்டல் மீடியா ஆகியவற்றில் கடந்த 37 ஆண்டுகாலமாக பணியாற்றி வருகின்றேன். என்னுடைய எதிர்காலத்திற்கு தேவையான பொருளாதார ரீதியாக பாதுகாப்பாகவும், என்னுடைய மகளின் எதிர்காலத்துக்கு உதவுவதற்காகவும் நான் என்னுடைய வாழ்க்கை முழுக்க உழைத்துள்ளேன்.

நானும் என் மகளும் பாதுகாப்பாக செட்டில் ஆகியிருக்க வேண்டிய ஒரு கட்டம், ஆனால் சி.அழகப்பன் என்னுடைய பணம், சொத்து, ஆவணங்களை ஏமாற்றிவிட்டார். நான் என்னுடைய தாய் தந்தையை இழந்து, கணவரையும் இழந்து ஆதரவற்றளாக மட்டுமின்றி, ஒரு கைக்குழந்தையை வைத்திருந்த தாயாகவும் இருந்தேன். அப்போது என்னுடைய தனிமையையும், பலவீனத்தையும் பயன்படுத்தி அழகப்பன் 20 ஆண்டுகளுக்கு முன்பு என்னை அணுகினார்.

என்னுடைய வாழ்க்கையில் ஒரு அக்கறையான மூத்த நபர் போன்ற போர்வைக்குள் நுழைந்த அவர், அவரது குடும்பத்தையும் நுழைத்துக் கொண்டார். ஆகையால் அவரை நம்பி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, என்னுடைய சொத்து ஆவணங்களை ஒப்படைத்தேன். ஆனால் அவர் என்னை ஏமாற்றியது குறித்து தற்போதுதான் எனக்கு தெரியவந்தது.

நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம், சொத்து, ஆவணங்களை மீட்க போராடி வருகின்றேன். எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், சட்டத்தையும், விதிமுறைகளையும் பின்பற்றினேன். ஆகையால் என்னுடைய முதலமைச்சர், காவல்துறை, நீதித்துறை ஆகியவற்றின் மீது முழு நம்பிக்கை வைத்து, தொடர்ந்து பல புகார்களையும் அளித்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிக்கப்படுவதை தற்போது அறிந்தேன்.

2021 தமிழ்நாடு சட்டசபை தேர்தலின்போது, பாஜக சார்பாக ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுவதற்கு எனக்கு வாய்ப்பு தருவதாக வாக்களிக்கப்பட்டது. ஆகையால் ராஜபாளையம் மக்களுக்காகவும், பாஜகவை அடித்தளத்திலிருந்து வலுப்படுத்தவும் என்னை அர்ப்பணித்து பணியாற்றி வந்தேன். இருப்பினும் அந்த வாய்ப்பானது கடைசி நேரத்தில் ரத்தானது.

ஆனாலும், நான் கட்சிக்கான என்னுடைய பணிகளை தொடர்ந்து செய்து வந்தேன். கடந்த 25 ஆண்டுகாலம் கட்சியில் எனக்கு முற்றிலுமாக ஆதரவு இல்லை என்பதையும், அழகப்பன் சட்டத்திலிருந்து தப்பிக்கவும், எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு 40 நாட்களாக அவர் தலைமறைவாக இருப்பதற்கும் சில மூத்த பாஜக உறுப்பினர்கள் உதவி செய்திருப்பதை அறிந்த போது மனம் நொறுங்கிப்போனேன்.

ஆகையால் இப்போதும் என்னுடைய முதலமைச்சர், என் காவல்துறை, என் நீதித்துறை ஆகியோர் எனக்கான நீதியை பெற்று தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. தற்போது மிகப்பெரிய வலி மற்றும் மன வேதனையுடனும், அதேநேரம் கடும் உறுதியுடனும் இந்த ராஜினாமா கடிதத்தை நான் எழுதுகிறேன்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு நீட் வேண்டாம்; வேறு மாநிலங்களில் வேண்டுமானால் இருக்கட்டும்: ப.சிதம்பரம் கருத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.