ETV Bharat / state

விக்டோரியா கெளரி Vs ஜான் சத்யன் - ஆதரவும் எதிர்ப்பும்!

author img

By

Published : Feb 8, 2023, 7:23 AM IST

சிறுபான்மையினரை விமர்சித்ததாக எதிர்ப்பு எழுந்த விக்டோரியா கெளரி உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில், பிரதமருக்கு எதிரான கருத்தை பகிர்ந்த ஜான் சத்யன் நிராகரிக்கப்பட்டது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விக்டோரியா கெளரி Vs ஜான் சத்யன் - ஆதரவும் எதிர்ப்பும்!
விக்டோரியா கெளரி Vs ஜான் சத்யன் - ஆதரவும் எதிர்ப்பும்!

சென்னை: கடந்த ஜனவரி 17ஆம் தேதி கூடிய உச்ச நீதிமன்ற கொலிஜியம், வழக்குரைஞர் விக்டோரியா கெளரி உட்பட 8 பேரைச் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கக் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்தது. ஆனால், விக்டோரியா கெளரி சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளைப் பதிவிட்டதாக அவரது பெயரைப் பரிந்துரை பட்டியலிலிருந்து நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்குரைஞர்கள் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இதன் விசாரணை முதலில் பிப்ரவரி 10ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது. இதனிடையே நேற்றைய முன்தினம் (பிப்.6) அன்று, விக்டோரியா கெளரி உள்பட 5 பேரைக் கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். அதேநேரம் அதற்கு மறுநாளே (பிப்.7) உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப் பிரமாணம் செய்ய வைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

எனவே இதனை அவசர வழக்காக விசாரித்த சஞ்சீவ் கண்ணா மற்றும் பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் விக்டோரியா கெளரி, நேற்று (பிப்.7) சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகப் பதவி ஏற்றுக் கொண்டார். இருப்பினும், விக்டோரியா கெளரியின் நியமனத்துக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

யார் இந்த ஜான் சத்யன்? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம், உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க 6 பேரை கடந்த 2022ஆம் ஆண்டு பரிந்துரை செய்தது. அதில் 4 பேரை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, எஸ்.செளந்தர் மற்றும் ஜான் சத்யன் ஆகியோரை நிராகரித்தது.

இந்த நிராகரிப்புக்குக் காரணமாக, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் கட்டுரையை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததாகவும், மருத்துவ மாணவி "அனிதா உயிரிழப்பு இந்தியாவிற்கான அவமானம், அரசியல் துரோகம்" எனக் குறிப்பிட்டதாக உளவுத்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் வழக்குரைஞர் ஜான் சத்யனின் பெயர் நிராகரிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

தற்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம், சமூக வலைத்தளங்களில் வரும் கருத்துக்களைப் பகிர்ந்தார் என்பதற்காக ஒருவரை நிராகரிக்க முடியாது. உளவுத்துறை அறிக்கையில் தகுதி, திறமை மற்றும் அனுபவம் நிறைந்தவர் எனச் சான்றிதழ் அளித்துள்ளதால், வழக்குரைஞர் ஜான் சத்யனை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கலாம் என மீண்டும் பரிந்துரை செய்தது.

விமர்சனங்கள் செய்வதற்கு எந்த வரையறையும் இல்லை என்பதால் நீதிபதிகளுக்கான நியமனத்தில் வழக்குரைஞர் ஜான் சத்யனுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என நீதிபதிகள் கவுல், இந்திரா பானர்ஜி, ராமசுப்ரமணியன் மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

மத்திய அரசின் தலையீடு உள்ளதா? ‘இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஜிஹாத்தா? கிறிஸ்துவ அமைப்புகளா? இஸ்லாம் பச்சை பயங்கரவாதம் என்றால் கிறித்துவம் வெள்ளை பயங்கரவாதம்’ என இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசிய விக்டோரியா கெளரி பேசியுள்ளார்.

இவ்வாறு இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசிய விக்டோரியா கெளரியின் நியமனத்திலும், நாட்டின் பிரதமருக்கு எதிராகப் பேசியதாக ஜான் சத்யன் நிராகரிப்பிலும் மத்திய அரசின் தலையீடு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: விக்டோரியா கெளரி உயர்நீதிமன்ற நீதிபதியானது சரியா? ஆதரவும், எதிர்ப்பும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.