ETV Bharat / state

சிறப்புக் காட்சிக்கு ரோகிணி தியேட்டருக்கு அபராதம் விதித்த வழக்கு: தமிழக டி.ஜி.பி. பதிலளிக்க உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 10:37 PM IST

Rohini theater: பண்டிகைகளின் போது அதிகாலை சிறப்பு காட்சி திரையிட்டதாக அபராதம் விதித்த உத்தரவை எதிர்த்து ரோகிணி திரையரங்கம் தொடர்ந்த மனுவுக்கு தமிழக டி.ஜி.பி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ்நாடு சினிமா விதிகளின் படி, திரையரங்குகள் ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் எனவும், பண்டிகை நாட்களில் ஒரு காட்சி கூடுதலாகத் திரையிட்டுக் கொள்ளலாம் எனவும், விதியை மீறும் பட்சத்தில் திரையரங்குகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடிகர் விஜய் நடித்த "வாரிசு" திரைப்படமும், நடிகர் அஜித் நடித்த "துணிவு" திரைப்படமும் வெளியாகின. படங்கள் வெளியான கடந்த ஜனவரி 11ஆம் தேதி அதிகாலை 5 மணிக்குக் காட்சி திரையிடப்பட்டதாகக் கூறி, சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்குக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மார்ச் 31ம் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், அந்த உத்தரவின் அடிப்படையில் கடும் நடவடிக்கைகள் எடுக்கத் தடை விதிக்க கோரியும் ரோகிணி திரையரங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையும் படிங்ங்க: மதுரை திருமங்கலம் பேருந்து நிலைய கட்டடம் தொடர்பான வழக்கு - உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு என்ன?

இந்த மனுவில், ஏற்கனவே ஓ.டி.டி. போன்றவற்றால் திரையரங்குகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், அரசின் இந்த கடும் கட்டுப்பாடுகள் திரையரங்குகளின் உரிமையாளர்களுக்குப் பெருத்த நிதி இழப்பை ஏற்படுத்துவதாக்க தெரிவிக்கப்பட்டிருந்து.

மேலும், கடந்த ஜனவரி 11ம் தேதி அதிகாலை ஒரு மணிக்கும், 4 மணிக்கும் காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், காவல்துறை அதிகாரிகள் எந்த முறையான விசாரணையும் நடத்தாமல் அபராதம் விதித்துள்ளதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, பண்டிகைகளின் போது அதிகாலை சிறப்புக் காட்சி திரையிட்டதாக 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த உத்தரவு குறித்து செப்டம்பர் 13ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக டி.ஜி.பி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையருக்கும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ‘பெண்களுக்கு எதிராக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ - ஹெச்.ராஜாவுக்கு நீதிமன்றம் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.