ETV Bharat / state

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்

author img

By

Published : Nov 17, 2020, 2:20 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள நாகை, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கனமழை
தமிழ்நாட்டில் கனமழை

கன்னியாகுமரி கடல் பகுதியில் நிலவும் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக காணொலி வாயிலாக செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன், குமரிக்கடல் பகுதியில் நிலவும் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும்.

தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன்

அதேபோல, தமிழ்நாட்டில், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக (சென்டிமீட்டரில்) தூத்துக்குடி 17, பாபநாசம் (திருநெல்வேலி) 14, வந்தவாசி (திருவண்ணாமலை) 11, திருபுவனம் (சிவகங்கை) 10, மதுராந்தகம் (செங்கல்பட்டு), மைலாடி (கன்னியாகுமாரி) தலா 9 , கொட்டாரம் (கன்னியாகுமாரி), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்) தலா 8, பாளையம்கோட்டை, ராஜபாளையம் (விருதுநகர்), கோவில்பட்டி (தூத்துக்குடி ) தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மேலும், குமரிக்கடல், மாலத்தீவு, கேரள கடற்பகுதி, லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதே போல் வரும் 18 ஆம் தேதி மாலத்தீவு, கேரள கடற்பகுதி, லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். அதேபோல் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் இன்று மாலைக்குள் கரை திரும்ப வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிக்க: பலத்த மழையால் சென்னை மக்களுக்கு குடிநீர் பிரச்னை வராது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.