ETV Bharat / state

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர 40 ஆயிரத்து 193 மாணவர்கள் விண்ணப்பம்!

author img

By

Published : Jul 12, 2023, 5:51 PM IST

Updated : Jul 12, 2023, 6:47 PM IST

தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர 40 ஆயிரத்து 193 மாணவர்கள் விண்ணப்பத்துள்ளனர். கடந்த ஆண்டை விட 3,987 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள இளநிலை மருத்துவப் படிப்புக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கு 40 ஆயிரத்து 193 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்தாண்டு 36 ஆயிரத்து 206 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவப்படிப்பிற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 16ஆம் தேதி வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை தேசியத் தேர்வு முகமை வெளியிடாமல் இருப்பதால் கலந்தாய்வு நடைபெறும் தேதி குறித்து எந்தவிதமான முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான விண்ணப்பங்கள் ஜூன் 28ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. மாணவர்கள் www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என்ற இணையதளத்தின் மூலம் ஜூலை 12ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் . இந்த நிலையில் இன்று (ஜூலை 12) மதியம் 2 மணி வரையில் 40 ஆயிரத்து மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால், கடந்தாண்டு 36 ஆயிரத்து 206 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். கடந்தாண்டைவிட 3,987 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பம் செய்துள்ளனர்.

மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணம் உயர்வு: இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரியில் 5,050 இடங்களும், கே.கே.நகர் இஎஸ்ஐசி மருத்துவமனையில் உள்ள 150 இடங்களும், தமிழ்நாட்டில் உள்ள 2 பல் மருத்துவக்கல்லூரியில் 200 இடங்களும் உள்ளன. இந்த நிலையில், இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மருத்துவப் படிப்புகளுக்கான கல்விக்கட்டணம் 2016-17 ஆண்டிற்கு பின்னர் உயர்த்தப்படாமல் இருந்தது. இந்தநிலையில் அரசு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணம் 2023-24 ஆம் கல்வியாண்டு முதல் மாற்றி அமைக்கப்படுகிறது.

அதன்படி எம்பிபிஎஸ் படிப்பிற்கு கல்விக்கட்டணமாக 6,000 ரூபாய், சிறப்பு கட்டணமாக 2000 ரூபாய், பல்கலைக் கழக கட்டணமாக ஜிஎஸ்டி உட்பட 7,473 ரூபாய் நிர்ணயம் உட்பட 18,073 ரூபாயும், பிடிஎஸ் படிப்பிற்கு கல்விக்கட்டணமாக 4,000 ரூபாய், சிறப்பு கட்டணமாக 2,000 ரூபாய், பல்கலைக் கழக கட்டணமாக (ஜிஎஸ்டி உட்பட) 7,473 ரூபாய் உட்பட 16,073 என அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

MBBS, BDS படிப்புக்கான கல்விக்கட்டணம்: எம்டி, எம்எஸ் படிப்பிற்கு கல்விக்கட்டணம் ஏற்கனவே 30 ஆயிரமாக இருந்ததை உயர்த்தி, 40 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு கட்டணம் 10 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டிஎம்., எம்பிஎச் படிப்பிற்கு கல்விக்கட்டணத்தை 20 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்த்தியும், சிறப்பு கட்டணமாக 10 ஆயிரம் நிர்ணயம் செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கலந்தாய்வு எப்போது?: எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை தேசியத் தேர்வு முகமை வெளியிடாமல் இருப்பதால் கலந்தாய்வு நடைபெறும் தேதி குறித்து எந்தவிதமான முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வில் ஒவ்வொரு சுற்றும் முடிந்தப் பின்னர் கடந்தாண்டில் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான சேர்க்கைக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்தாண்டில் மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்ப்பதற்கான கலந்தாய்வில் மாற்றங்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும் மருத்துவப்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் கடந்த ஆண்டு 6 மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முதலமைச்சர் கோப்பை போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளை வாழ்த்தி வழியனுப்பிய வேலூர் மாவட்ட ஆட்சியர்!!

Last Updated : Jul 12, 2023, 6:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.