அம்பத்தூர் காவல் மாவட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் திருடப்பட்ட இரு சக்கர வாகனங்கள் தேடப்பட்டு வந்தன. இதுகுறித்து, பொதுமக்கள் சார்பில் அந்தந்த காவல் நிலையங்களுக்கு புகார்கள் வந்தன.
இதனையடுத்து, அம்பத்தூர் துணை கமிஷனர் தீபாசத்யன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. இதில், பழைய குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர். மேலும், பைக் திருடு போன இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலம், குற்றவாளிகளின் உருவத்தை வைத்தும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதில், ஆவடியை அடுத்த திருநின்றவூர், பெரியார் நகர், திருவள்ளுவர் 3ஆவது தெருவைச் சார்ந்த கார்த்திக் (29), திருநின்றவூர், பாண்டியன் ரைஸ்மில் தெருவைச் சார்ந்த மணிகண்டன் (21), திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு, கந்தன்கொல்லை கிராமத்தைச் சார்ந்த கார்த்திக் (38) ஆகியோர் குற்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில், காவலர்கள் தலைமறைவாக இருந்த மூவரையும் சுற்றிவளைத்து பிடித்தனர்.
பின்னர், அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் 18 இரு சக்கர வாகனங்களை காவலர்கள், பல்வேறு இடங்களில் இருந்து பறிமுதல் செய்தனர். மேலும், காவலர்கள் இவர்களை கைது செய்து வேறு ஏதும் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளனரா என தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல், அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு ஆங்காங்கே விட்டு சென்ற 15 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும், சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளையும், பைக்குகளையும் பறிமுதல் செய்த தனிப்படை காவலர்களை, சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் பாராட்டியுள்ளார்.