சென்னை: கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஃபேஸ்புக் மூலமாக கணேஷ் என்ற நபருடன் நெருக்கமாகப் பழக்கமாகியுள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பழகி வந்த நிலையில், கடந்த மாதம் 5ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறித் திருமணம் செய்துகொண்டனர். இதையறிந்த பெண்ணின் பெற்றோர், தனது மகளை மீட்டுத் தரக்கோரி காவல் நிலையத்தில் புகாரளித்தும், அவர் பெற்றோருடன் செல்வதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
மேலும் சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு 18 வயது நிறைவடைந்ததால், காவலர்கள் அப்பெண்ணை கணேஷுடன் அனுப்பிவைத்தனர். இதையடுத்து, இருவரும் வில்லிவாக்கம், ராஜாஜி நகர் பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில், திருமணமான முதல் நாள் அன்றே கணேஷ் 17 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணை வீட்டுப் பணிப்பெண் என அறிமுகப்படுத்தி, அவருடனும் திருமணத்தைத் தாண்டிய உறவில் இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண், நடந்தவை குறித்து கேட்டபோது, அவரை தனியறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளார், கணேஷ். இதை வெளியில் கூறினால் கொலை செய்வதாகவும் மிரட்டி, குடிபோதையில் அப்பெண்ணின் கைகளைக் கட்டி, வாயில் துணியை வைத்து அடைத்துப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியுள்ளார்.
மேலும், இளம்பெண்களுக்கும் போதைப்பொருளினை அளித்து, அவர்களை தனது நண்பர்களுடன் இணைந்து பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி, அவற்றை வீடியோ எடுத்து நண்பர்களிடம் பகிர்ந்துள்ளார்.
மேலும், தனக்கு முன்னதாகவே 11 பெண்களுடன் திருமணமாகியுள்ளதாகவும், அவர்களுடன் தனிமையில் இருக்கும்போது எடுத்த வீடியோக்களை அப்பெண்களிடம் காட்டியும் கொடுமையாக நடந்து வந்துள்ளார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட கொளத்தூரைச் சேர்ந்த அந்த இளம்பெண் அக்கம்பக்கத்தினரிடம் தனது பெற்றோருடன் தன்னை அனுப்பி வைக்குமாறு உதவி கேட்டுள்ளார். பின்னர், அவர் பெற்றோர் உதவியுடன் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மனு அளித்தனர். அது தொடர்பாக ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கணேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், அவரிடமிருந்து பறிமுதல் செய்த செல்போனில் 20க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் உள்ளிட்ட பல முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் கணேஷ் அவரது நண்பர் கார்த்திக்(19) என்பவருடன் சேர்ந்து 17 வயது சிறுமி உட்பட பல பெண்களுடன் கூட்டு பாலியலில் ஈடுபட்டது தெரியவந்தது. அதுமட்டுமின்றி, கணேஷிக்கு தேவையான பண உதவிகள்,வீடு பார்த்து கொடுப்பது போன்ற உதவிகளையும் செய்து வந்தார்.
இதையடுத்து, கணேஷ் இது போல் எத்தனை பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து வீடியோ எடுத்துள்ளார் என்பதை விசாரிக்க அவரை வில்லிவாக்கம் காவல்துறையினர் விசாரணைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவல் ஆய்வாளர் உட்பட 23 பேரை கைது செய்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்திற்கு பிறகு மீண்டும் இதே போல் சென்னையில் இதுபோன்று நடந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னை டாக்ஸ் சேனலின் வீடியோக்களை நீக்கிய யூ-ட்யூப்