ETV Bharat / state

'இலங்கைக்கு உதவாதீர்கள்' - இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 19 தமிழ்நாட்டு மீனவா்கள் முழக்கம்!

author img

By

Published : May 5, 2022, 7:09 PM IST

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 19 தமிழ்நாட்டு மீனவா்கள் சென்னை வந்தனர். அப்போது சென்னை விமான நிலையத்தில், 'இலங்கை மக்களுக்கு ஒரு உதவியும் செய்யாதீர்கள். உணவு தராமல் கொடுமைப்படுத்தினர்' என மீனவர்கள் முழக்கம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

“இலங்கைக்கு ஒரு உதவியும் செய்யாதீர்கள்”  இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 19 தமிழ்நாட்டு மீனவா்கள் கோஷம்
“இலங்கைக்கு ஒரு உதவியும் செய்யாதீர்கள்” இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 19 தமிழ்நாட்டு மீனவா்கள் கோஷம்

சென்னை : தமிழ்நாட்டைச்சேர்ந்த ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது, எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை ராணுவம் கடந்த மார்ச் மாதம் 19 தமிழ்நாட்டு மீனவர்களைக் கைது செய்தது.

தமிழ்நாடு முதலமைச்சா் ஸ்டாலின் முயற்சியால் மத்திய அரசின் உதவியுடன் இலங்கை சிறையில் இருந்த 19 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்தியத் தூதரக அலுவலர்கள் மீனவர்களை கொழும்பில் இருந்து சென்னை சென்ற விமானத்தில் அனுப்பி வைத்தனர்.

சென்னை விமான நிலையம் வந்த 19 மீனவர்களை தமிழ்நாடு மீன்வளத்துறை அலுவலர்கள் வரவேற்று ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கு வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர். அப்போது மீனவர்கள் திடீரென, 'எங்களுக்கு சரியாக உணவு தரவில்லை. பாம்புகள் இருக்கக்கூடிய பகுதியில் தங்க வைத்தனர். இலங்கையில் மீனவர்கள் மீது ஒன்றரை கோடி வரை அபராதம் விதிப்பதை ஏற்க முடியாது. இதை ரத்து செய்ய வேண்டும். இந்தியத் தூதரக அலுவலர்களும் ஒத்துழைக்கவில்லை. தமிழ்நாட்டு மீனவர்களை கொடுமைப்படுத்தும் இலங்கைக்கு நிவாரணம் வழங்கக்கூடாது. ஒரு ரூபாய் கூட தரக்கூடாது' என முழக்கங்கள் எழுப்பினர். இதனால் விமானநிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: ஒரே மாதிரி அழகாக எழுதும் பள்ளி மாணவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.