ETV Bharat / state

10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கி, கல்வித் தொலைக்காட்சி தொடக்கம்

author img

By

Published : Jul 14, 2020, 9:46 PM IST

சென்னை: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கி, கல்வித் தொலைக்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், 10ஆம் வகுப்பு மாணவர்கள் வீட்டிலிருந்து கல்வி கற்பதற்காக தமிழ்நாடு அரசு, கல்வி தொலைக்காட்சியை செயல்படுத்த திட்டமிட்டது.

அதன்படி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணி நேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சி ஒளிபரப்பும், பிற வகுப்புகளின் பாடங்களுக்கான ஒளிபரப்பும் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இன்று (ஜூலை14) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கிவைத்தார். அத்துடன் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் திட்டத்தையும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தொடங்கிவைத்தார்.

அவருடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் க. சண்முகம், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக் கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்தநிகழ்வில் கரோனா வைரஸ் காரணமாக 2020-21ஆம் கல்வியாண்டில் கல்வி மற்றும் கற்பித்தல் ஆகியவற்றில் ஏற்படும் சிரமங்களை எதிர்கொள்ள தேவையான ஆலோசனைகள் வழங்கிட தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கையும் முதலமைச்சரிடம் சமர்பிக்கப்பட்டது. அதனை பள்ளிக் கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் வழங்கினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
வல்லுநர் குழு அறிக்கையை வழங்கிய போது

அதையடுத்து தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகளில் கல்வி பயில ஏதுவாக மென் உருவிலான பாடங்களை (Video Lessons) மடிக்கணினிகளில், அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் (Hi-Tech Labs) வாயிலாக தரவிறக்கம் செய்யும் திட்டமும் தொடங்கப்பட்டது.

மேலும், பள்ளிக் கல்வித் துறையின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லவும், பொதுத் தேர்வுகள், கல்வி உதவித் தொகை தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் குறித்து தெரிந்துகொள்ளவும் 2019 ஆகஸ்டு 26ஆம் தேதி கல்விதொலைகாட்சி தொடங்கப்பட்டது.

அதில் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள், படைப்பாற்றல் மேம்படுத்தும் நிகழ்ச்சிகள், மாணவர்களின் சந்தேகங்களுக்கு நிபுணர்களின் பதில்கள், பள்ளிக் கல்வித் துறையின் என பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டுவருகின்றன. அதையடுத்து கரோனா வைரஸ் காரணமாக அதில் தற்போது பாடங்களுக்கான ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மருத்துவ மாணவர் சேர்க்கை: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.