ETV Bharat / state

தீபாவளி சீட்டு மோசடி: பணத்தைச் சுருட்டிக்கொண்டு வெளி மாநிலத்துக்கு ஓட்டம் பிடித்த நபர்!

author img

By

Published : Feb 29, 2020, 10:23 AM IST

செங்கல்பட்டு: செய்யூர் அருகே தீபாவளி சீட்டு நடத்தி வந்தவர் வாடிக்கையாளர்களின் பணத்தைச் சுருட்டிக்கொண்டு வெளி மாநிலத்திற்கு தப்பி ஓடியதால், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பணத்தைப் பறிகொடுத்த மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பணம் கொடுத்து ஏமாந்த வாடிக்கையாளர்கள்
பணம் கொடுத்து ஏமாந்த வாடிக்கையாளர்கள்

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த அணைக்கட்டுப் பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அனைத்து மக்களும் அப்பகுதியில் உள்ள பகவதி அடகுக் கடையில் நகை வைத்து பணம் பெறுவது, நகை மீட்பது என அனைத்து வர்த்தகமும் செய்து வந்தனர்.

இந்த நகைக் கடையை நடத்தி வந்தவர் மோதிலால். இவர் தீபாவளி சீட்டு நடத்தி சுமார் 800க்கும் மேற்பட்டோரிடம் மாதம் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை தீபாவளி சீட்டு பணம் வசூல் செய்து வந்துள்ளார். திடீரென கடந்த நவம்பர் மாதம் முதல் மோதிலால் வெளி மாநிலத்திற்குச் சென்று தலைமறைவானார்.

இதனையடுத்து அப்பகுதியில் உள்ள அணைக்கட்டு காவல் நிலையத்தில் அப்பகுதி மக்கள் புகாரளித்தனர். அணைக்கட்டு காவல் துறை புகாரைப் பெற்றுக்கொண்டு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்

இதனால் விரக்தியடைந்த அப்பகுதி மக்கள் நேற்று செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணனை நேரில் சந்தித்து மனு அளிக்கச் சென்றனர். ஆனால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அங்கு இல்லாததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பணம் கொடுத்து ஏமாந்த வாடிக்கையாளர்கள்

அப்பகுதி மக்கள் சுமார் 1 கோடிய 50 லட்சம் ரூபாய் வரை பணம், நகை ஆகியவற்றைப் பறிகொடுத்து விட்டதாகக் கவலை தெரிவிக்கின்றனர். எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதையும் படிங்க: 800 கோடி ரூபாய் மோசடி செய்த அதிமுக பிரமுகர்: தர்ணாவில் ஈடுபட்ட மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.