ETV Bharat / state

சிறுக சிறுக அழிகிறதா வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்?

author img

By

Published : Dec 9, 2020, 1:24 PM IST

செங்கல்பட்டு: புகழ் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு, பல விதங்களில் ஆபத்து ஏற்பட்டு வருவதாக இயற்கை ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

sanctuary
sanctuary

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகத்திற்கு அருகில் உள்ளது, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பன்னாட்டு அளவில் பெருமை சேர்க்கும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். உலகின் பல நாடுகளிலிருந்தும், கண்டங்களிலிருந்தும் பலவித பறவைகள், பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பறந்து வந்து இங்கு குவிவது, ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் நிகழ்வாகும்.

இங்குள்ள ஏரியில் உள்ள நீர்க்கடம்பை மரங்கள், பறவைகள் கூடுகட்டி வாழத் தேவையான வடிவமைப்பையும், இலகுவான அதேசமயம் உறுதியான மரக் குச்சிகளையும் கொண்டுள்ளதே இதற்குக் காரணம். மேலும், இக்கிராமத்தைச் சுற்றியுள்ள வயல்கள், ஏரிகள் இங்கு வரும் பறவைகளுக்கு உணவளிக்கும் ஆதாரங்களாக விளங்கி வருகின்றன.

இங்கு வருகை தரும் பறவைகள் சில மாதங்கள் தங்கி குஞ்சு பொறித்து, பின்னர் தங்கள் குஞ்சுகளுடன் தாய்நாடு திரும்பும். உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பறவைகளைக் கண்டு ரசிக்க, ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் நாள்தோறும் சரணாலயத்திற்கு வருகை தருவர். இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர் என்பதால், இச்சிறிய கிராமம் தமிழகத்திற்கு குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் தனி அடையாளமாக விளங்கி வருகிறது.

பரப்புளவு சுருங்கினால் வலசை பாதித்து பறவைகளின் வரத்து முற்றிலும் குறையும்!

தற்போது பெய்து வரும் மழையால் சரணாலயம் அமைந்துள்ள ஏரி முழுவதும் நிரம்பி, இன்றைய நிலவரப்படி, சுமார் 15 ஆயிரம் பறவைகள் பல நாடுகளிலிருந்தும் வந்து இங்கு கூடு கட்டியுள்ளன. நத்தை கொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் போன்ற அபூர்வ பறவைகளும் வந்துள்ளன.

இத்தகைய பெருமை வாய்ந்த சரணாலயம் காலப்போக்கில் சிறுக சிறுக அழியும் நிலை ஏற்படலாம் என, சூழல் ஆர்வலர்களும், உயிரின ஆர்வலர்களும் வருந்துகின்றனர். பறவைகளின் பாதுகாப்பு கருதி வேடந்தாங்கலைச் சுற்றி, ஏறத்தாழ 5 கிமீ பரப்பளவை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ள நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இந்தப் பரப்பளவை 2 கிமீ அளவிற்கு மட்டுமே இருக்குமாறு சுருக்க அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது பலரையும் பதற வைத்தது.

ஒருசில தனியார் நிறுவனங்களின் சுய லாபத்திற்காக இப்படி பரிந்துரை செய்யப்பட்டதாக பரபரப்பு கிளம்பிய நிலையில், அந்தப் பரிந்துரை தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. அவ்வாறு பரப்புளவு சுருங்குமாயின், வலசை பாதிக்கப்பட்டு வரும் ஆண்டுகளில் பறவைகளின் வரத்து முற்றிலும் குறைந்து விடும் என்பதே சூழல் ஆர்வலர்களின் ஆதங்கமாக உள்ளது.

அதோடு கல் குவாரிகள் உருவத்திலும் வேடந்தங்கலை சிறுகச் சிறுக ஆபத்து சூழ்கிறது என்கின்றனர் அப்பகுதி மக்கள். இங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் திருமுக்கூடலைச் சுற்றி பல குவாரிகள் இயங்கி வருகின்றன. இவற்றால் இப்பகுதியின் சுற்றுச்சூழல் ஏற்கனவே நாசமாகி வருவதைக் குறிப்பிடும் மக்கள், தற்போது மேலும் பல குவாரிகளுக்கு அனுமதி அளிக்கும் முனைப்பில் காஞ்சிபுர மாவட்ட நிர்வாகம் இருப்பதாகவும் பொறுமுகின்றனர்.

இயற்கை எழில் கொஞ்சும் எடமச்சி மலையில் கல்குவாரி?

குறிப்பாக, இயற்கை எழில் கொஞ்சும் எடமச்சி மலையில் கல்குவாரி அமைக்க சிலர் முயன்று வருவதாகக் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எடமச்சி பகுதி மக்களின் வாழ்வாதாரமே விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புதான். இங்கு புதிதாகக் கல்குவாரி அமைந்தால், அம்மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் குலையும் என்பதோடு, சூழல் சீர்கேட்டால், அருகிருக்கும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமும் அடியோடு அழியும் நிலை ஏற்படும் என வருந்துகின்றனர்.

தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் மேற்குறிப்பிட்ட அபாயங்களைக் கருத்தில் கொண்டு, சர்வதேசப் புகழ்பெற்ற சரணாலயத்தை பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: 5 ஆண்டுகளுக்கு பிறகு நிறைந்த குளம்... கிடா வெட்டி கொண்டாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.