ETV Bharat / state

செங்கல்பட்டில் கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறப்பு!

author img

By

Published : May 24, 2021, 4:25 PM IST

செங்கல்பட்டு அடுத்த தண்டரை ஊராட்சியில் தனியார் கல்லூரியில் 150 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்துவைத்தார்.

செங்கல்பட்டில் கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறப்பு
செங்கல்பட்டில் கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறப்பு

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியது. மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கரோனா சிகிச்சைக்காக சித்த மருத்துவமனைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக செங்கல்பட்டு அருகே தண்டரையில் உள்ள ஆசான் பொறியியல் கல்லூரியில் 150 படுக்கை வசதிகளுடன் சித்த மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. அதனை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் குத்துவிளக்கு ஏற்றிவைத்து திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், திருப்போரூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ், மாவட்ட சுகாதாரத்துறை துணை ஆணையர் பிரியா, திமுகவினர், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். பின்பு, பொது மக்கள், மாற்றுத்திறனாளிகளுக்குக் கரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதை அமைச்சர் பார்வையிட்டார். ஊரடங்கு காலத்தில் வீட்டிற்கே காய்கறிகள் கொண்டு வந்து கொடுக்கும் வகையில் நடமாடும் காய்கறி வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பரசன் கூறியதாவது ," சித்த மருத்துவமனை தொடங்கப்பட்டதன் நோக்கம் கரோனா தொற்று உறுதியாகி, ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படும். ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகள் சேர்த்து மொத்தமாக 5,066 படுக்கைகள் உள்ளன. இதில் 3,302 ஆக்ஸிஜன் படுக்கை வசதியுடன் உள்ளது.

செங்கல்பட்டில் கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறப்பு

மேலும் தனியார் மருத்துவமனைகளில் பாதி எண்ணிக்கையிலான படுக்கைகளை அரசு கேட்டுள்ளது. அதற்கான வேலையும் நடைபெற்று வருகிறது. கரோனாவில் இருந்து மக்களைப் பாதுகாக்க எல்லாவிதமான முயற்சிகளும் வேகமாக எடுத்துவருகிறோம்.

இன்று முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்களின் வீட்டருகே சென்று கொடுக்கும் வகையில் நடமாடும் காய்கறி வாகனம் அனைத்து நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சிகளிலும் தொடங்கப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:PSBB பள்ளி ஆசிரியர் பாலியல் புகார் தொடர்பாக பள்ளியில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.