ETV Bharat / sports

CSK vs MI: சபாஷ்.. சரியான போட்டி; மும்பையுடன் மல்லுக்கட்டும் சூப்பர் கிங்ஸ்!

author img

By

Published : Apr 8, 2023, 2:29 PM IST

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகள் மோதும் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதால், வெற்றி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. சென்னை அணியின் பந்துவீச்சு சற்று பலவீனமாக உள்ளதால், அந்த அணி பவுலர்கள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

IPL
ஐபிஎல்

மும்பை: ஐபிஎல் தொடரின் 12வது லீக் ஆட்டத்தில் இன்று (ஏப்ரல் 8) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு சீசனில் குஜராத் அணியுடன் நடைபெற்ற ஆட்டத்தில் தோல்வி அடைந்த சென்னை அணி, மற்றொரு ஆட்டத்தில் லக்னோ அணியை வீழ்த்தி, மீண்டு வந்துள்ளது. பெங்களூரு அணியுடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்த நிலையில், இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காதது அந்த அணியின் ரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் நோக்கில் அந்த அணி களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம்.

நம்பிக்கை தரும் திலக் வர்மா: கேப்டன் ரோஹித் சர்மா, இஷாந்த் கிஷண், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 48 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்த மும்பை அணி ரன் சேர்க்க தடுமாறியது. எனினும், திலக் வர்மா 84 ரன்களை குவித்து அணியை சரிவில் இருந்து மீட்டார். கேமரூன் க்ரீன், திலக் வர்மா ஆகியோர் பொறுப்புடன் விளையாடினால் கணிசமான ரன்களை குவிக்கலாம்.

அர்ஜூன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு?: பந்துவீச்சை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, ரிச்சர்ட்சன் ஆகியோர் காயம் காரணமாக தொடர் முழுவதும் விலகியிருப்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. எனினும் பியூஷ் சாவ்லா, ஹிருத்திக் ஷோகீன், அர்ஷத் கான் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினால் சென்னை அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தலாம். இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் பயிற்சியின் போது காயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக இதுவரை களம் இறக்கப்படாத அர்ஜூன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர் அர்ஜூன் டெண்டுல்கர் கடந்த 3 ஆண்டுகளாக மும்பை அணியில் இருக்கும் நிலையில், இன்றைய போட்டியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மும்பை அணி சொந்த மண்ணில் களம் இறங்குவது அந்த அணிக்கு கூடுதல் பலம்.

சூர்யாவை பற்றி கவலையில்லை: மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்டு கூறுகையில், "சூர்யகுமார் யாதவின் ஃபார்மை பற்றி எனக்கு கவலையில்லை. அவர் மிகச்சிறந்த வீரர். நடப்பு சீசனில் அவர் நிச்சயம் கணிசமான ரன்களை குவிப்பார். எங்கள் அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாடி ரன்களை குவிப்பார்கள் என நம்புகிறேன்" என்றார்.

Yellow Army எப்படி?: இன்றைய போட்டி மும்பையில் நடந்தாலும், சென்னை அணிக்கு ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். கேப்டன் தோனிக்கு, தனி ரசிகர் பட்டாளம் இருப்பது சென்னை அணிக்கு கூடுதல் பிளஸ். அந்த அணியை பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர் ருத்துராஜ் கெய்வாட் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார். கடந்த இரண்டு ஆட்டங்களிலும் அவர் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்.

ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதேநேரம் வலைப்பயிற்சியின் போது அவர் காயம் அடைந்ததால், இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குவாரா என சந்தேகம் எழுந்துள்ளது. மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தால், மும்பை அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும். குறிப்பாக மொயீன் அலி பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் ஆறுதல் தருகிறார். கேப்டன் தோனி கடைசி கட்டத்தில் இறங்கி சிக்ஸர்களை பறக்கவிடுவது ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.

கவலை தரும் பந்துவீச்சு: சென்னை அணியின் பந்துவீச்சு தான் தற்போது பெரும் தலைவலியாக இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே நோ-பால்களை வீசி ரன்களை வாரி வழங்கியதால் கேப்டன் தோனி கடும் அதிருப்தி அடைந்தார். இதே போக்கு நீடித்தால் வேறொரு கேப்டனின் கீழ் நீங்கள் விளையாட வேண்டியிருக்கும் என பந்துவீச்சாளர்களை எச்சரித்தார். அதனால், இன்றைய ஆட்டத்தில் சென்னை பந்துவீச்சாளர்கள் கூடுதல் கவனத்துடன் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

தீபக் சாஹர் இன்னும் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தாத நிலையில், திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதுகுறித்து சக வீரர் மொயின் அலி கூறுகையில், "காயத்தில் இருந்து தற்போது தான் சாஹர் மீண்டு வந்துள்ளார். இனி வரும் ஆட்டங்களில் அவர் சிறப்பான பங்களிப்பை தருவார்" என்றார்.

சிசாண்டா மகலா வருகை: இதற்கிடையே தென்னாப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர் சிசாண்டா மகலா சென்னை அணியில் இணைந்திருப்பது அந்த அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. அண்மையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். ஒருவேளை ஆடும் லெவனில் சிசாண்டா இடம்பெற்றால், சான்ட்னருக்கு ஓய்வு அளிக்கப்படலாம்.

நேருக்கு நேர்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை சென்னை மற்றும் மும்பை அணிகள் 34 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. இதில் மும்பை அணி 20 போட்டிகளிலும், சென்னை அணி 14 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. சென்னை அணி 4 முறை கோப்பையை வென்றுள்ளது.

வான்கடேவில் போட்டி: சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் 12வது லீக் ஆட்டம், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

மும்பை உத்தேச அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷண் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், கேமரூன் க்ரீன், திலக் வர்மா, நேஹல் வதேரா, டிம் டேவிட், ஹிருத்திக் ஷோகீன், அர்ஷத் கான், குமார் கார்த்திகேயா/பியூஷ் சாவ்லா, ஜோஃப்ரா ஆர்ச்சர்.

சென்னை உத்தேச அணி: கான்வே, கெய்க்வாட், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), சிசான்டா மகலா/சான்ட்னர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், தீபக் சாஹர், துஷார் பாண்டே.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.