12ஆவது ஐபிஎல் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் சென்னை அணி 12 போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகள்,, 4 தோல்விகளை பெற்றிருக்கிறது. இந்நிலையில் சென்னை அணி நேற்றையப் போட்டியில் மும்பை அணியிடம் 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
சென்னை அணியின் தோல்விக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான வாட்சன், ரெய்னா, ராயுடு ஆகியோர் பவர் ப்ளே ஓவர்களிலேயே விக்கெட்டுகளைக் கொடுத்து வெளியேறியதுதான் காரணமாக அமைந்தது.
இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடரில் பவர் ப்ளே ஓவர்களின்போது (1-6) அதிக விக்கெட்டுகளை இழந்த அணிகளின் பட்டியலில் 24 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி முதலிடத்தில் உள்ளது. சென்னை அணியைத் தொடர்ந்து 19 விக்கெட்டுகளை பறிக்கொடுத்து கொல்கத்தா அணியும், 13 விக்கெட்டுகளை பறிகொடுத்து மூன்றாவது இடத்தில் பெங்களூரு அணியும் உள்ளது.
![சிஎஸ்கே](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/csk-top-order-collapse_2704newsroom_1556339230_321.jpg)
சென்னை அணி சிறப்பாக ஆடி தொடர்ந்து வெற்றிபெற்று வந்தாலும் தோனியும், பந்துவீச்சாளர்களுமே சென்னை அணியைக் காப்பாற்றி வருகின்றனர். இதற்கு தோனி இல்லாத இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்தது சிறந்த உதாரணம்.
ப்ளே-ஆஃப் சுற்று நெருங்கிவரும் நிலையில், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஃபார்மில் இல்லாதது சென்னை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. வரும் போட்டிகளில் இந்த தவறை சென்னை அணி சரி செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.