ETV Bharat / sports

Asia Cup 2022: அணிக்கு திரும்புகிறார் கோலி... காத்திருப்பு பட்டியலில் ஷ்ரேயஸ் ஐயர்

author img

By

Published : Aug 9, 2022, 7:47 AM IST

Updated : Aug 9, 2022, 12:48 PM IST

இம்மாத இறுதியில் தொடங்கும் ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஷ்ரேயஸ் ஐயர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

மும்பை: ஆசியக்கோப்பை 2022 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா நேற்றிரவு (ஆக. 8) ட்விட்டரில் அறிவித்துள்ளார். ரோஹித் சர்மா தலைமையிலான அணியில் நட்சத்திர வீரர் விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இத்தொடரில், இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை வரும் ஆக. 28ஆம் தேதி சந்திக்கிறது.

யாருக்கெல்லாம் இடமில்லை...?: டி20 ஃபார்மட்டில் நடைபெறும் இத்தொடரில், பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகிய முக்கிய வேகப்பந்துவீச்சாளர்கள் காயம் காரணமாக இடம்பெறவில்லை. மேலும், காயம் காரணமாக நீண்ட நாளாக அவதிப்பட்டு வந்த கேஎல் ராகுல் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மிடில் ஆர்டர் பேட்டர்களில் சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், தினேஷ் கார்த்திக், அஸ்வின் ஆகியோரும் டி20 அணியில் தொடர்கின்றனர்.

டி20 ஸ்பெஷலிஸ்ட்கள் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் உள்ளிட்டோருக்கு இடமளிக்கப்படவில்லை. காத்திருப்போர் பட்டியலில் நட்சத்திர பேட்டர் ஷ்ரேயஸ் ஐயர், ஆல்-ரவுண்டர் அக்சர் படேல், தீபக் சஹார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். வீரர்கள் யாருக்காவது தொடரில் பங்கேற்க வாய்ப்பில்லாத நிலையில், இவர்கள் அணியில் சேர்க்கப்படுவார்கள்.

  • Notes -
    Jasprit Bumrah and Harshal Patel were not available for selection owing to injuries. They are currently undergoing rehab at the NCA in Bengaluru.

    Three players - Shreyas Iyer, Axar Patel and Deepak Chahar have been named as standbys.

    — BCCI (@BCCI) August 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

உலகக்கோப்பைக்கு முன்னோட்டமா?: பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகிய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர்கள் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் ஆகிய இளம் பௌலர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக் ஆகியோருக்கும் இடம் அளிக்கப்படவில்லை. ஆசியக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருப்பதால், அஸ்வின், சஹால், ஜடேஜா, பீஷ்னாய் என சுழற்பந்துவீச்சு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் டி20 உலகக்கோப்பை நடைபெற உள்ளதால், இந்திய அணியை வலுப்படுத்த தொடர்ந்து பல பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, தற்போது ஆசியக்கோப்பையில் விளையாடுவது உலகக்கோப்பை தொடரின் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

15ஆவது ஆசியக்கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. டி20 போட்டிகளாக நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் தகுதிச்சுற்றில் வெற்றியடையும் ஒரு அணி என மொத்தம் 6 அணிகள் பிரதான சுற்றில் விளையாட உள்ளன. தகுதிச்சுற்றில் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நான்கு அணிகள் மோதுகின்றன.

6 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன், தகுதிச்சுற்றில் தேர்வாகும் அணி இடம்பெறும். 'பி' பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. ஆசியக்கோப்பை தொடருக்கு முன்னதாக, இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாட உள்ளது. ஜிம்பாப்வேயில் ஆக. 18, 20, 22 ஆகிய தேதிகளில் இத்தொடர் நடைபெறுகிறது.

தற்போது, ஆசியக்கோப்பையில் தேர்வாகியுள்ள வீரர்களில் தீபக் ஹூடா, ஆவேஷ் கான் தவிர வேறு யாரும் ஜிம்பாப்வே உடனான ஒருநாள் அணியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட்: 10-வது சுற்றில் இந்தியாவின் வெற்றி!

Last Updated : Aug 9, 2022, 12:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.