ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடந்து வருகிறது. இதன் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. இதனிடையே கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல தொடர்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள், அவர்கள் ஆடியுள்ள ஆட்டங்களின் அடிப்படையில் பெற்ற புள்ளிகளின் சதவீதத்தை வைத்து தகுதிபெறுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நடைமுறையை ஐசிசி பரீசிலனை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைவைத்து பார்க்கும்போது, இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகளிலும் தோல்வியடைந்து, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகளிலும் வெற்றிபெற்றால் 480 புள்ளிகள் பெறுவதுடன், 66.67 சதவீத புள்ளிகளைப் பெறும்.
ஒருவேளை இங்கிலாந்து அணியுடன் அனைத்து போட்டிகளிலிலும் வெற்றிபெற்று, ஆஸ்திரேலியாவுடன் 3-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தால், இந்திய அணி 510 புள்ளிகள் பெறுவதுடன், 70.83 சதவீத புள்ளிகளையும் பெறும். ஒருவேளை இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 5-0 என வெற்றிபெற்று, ஆஸ்திரேலியாவுடன் 2-0 என தோல்வியடைந்தால், 500 புள்ளிகளைப் பெறுவதோடு, 69-44 சதவீத புள்ளிகளைப் பெறும்.
ஒருவேளை ஆஸ்திரேலியா அணியுடன் இரண்டு போட்டிகள் டிரா செய்யப்பட்டு, நியூசிலாந்து அணி அடுத்து ஆடவுள்ள தொடரை வென்றால், இந்திய அணியால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாது. ஏனென்றால் நியூசிலாந்து அணி அடுத்ததாக சொந்த மண்ணில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளை எதிர்கொள்ளவுள்ளது. அனைத்தையும் வென்றால் நியூசி. அணி 240 புள்ளிகள் பெறுவதோடு, 70 சதவீத புள்ளிகளையும் பெறும்.
இதனால் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் ஆடும் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இதையும் படிங்க: தொடர்ந்து இரண்டு பெனால்டி வாய்ப்பில் கோல் அடிக்காத செர்ஜியோ ராமோஸ்