ETV Bharat / sports

மழையால் வந்த வினை.. 2வது டி-20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி!

author img

By ANI

Published : Dec 13, 2023, 7:25 AM IST

IND Vs SA: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

India vs south africa second t20 cricket
இந்தியா தென் ஆப்பிரிக்கா 2வது டி20 கிரிக்கெட்

கெபெர்ஹா: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி, தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி, கடந்த டிச. 10ஆம் தேதி டர்பனில் நடைபெற இருந்த நிலையில், கனமழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி, நேற்று (டிச.12) கெபெர்ஹாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ராம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் ஜோடி, ஆரம்பமே அதிர்ச்சி கொடுக்கும் விதமாக டக் அவுட் ஆகி பெவிலியனுக்குத் திரும்பினர். பின்னர் களமிறங்கிய திலக் வர்மா, கேப்டன் சூர்யகுமார் யாதவ்வுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் அதிரடியாக ஆட நினைத்த திலக் வர்மா, 4 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் என 29 ரன்கள் எடுத்த நிலையில் கோட்ஸி பந்து வீச்சில் விக்கெட் இழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ், 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

இதனை அடுத்து களமிறங்கிய ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அரைசதம் கடந்தார். அவருடன் இணைந்து விளையாடிய ரவீந்திர ஜடேஜா தனது பங்கிற்கு ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 19 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் இழக்க, அடுத்து களமிறங்கிய அர்தீப் சிங் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.

டக்வொர்த் லூயிஸ்: இந்திய அணியின் ஆட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 180 ரன்களை குவித்து இருந்தது. இதனையடுத்து, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி, தென் ஆப்பிரிக்க அணிக்கு 15 ஓவர்களில் 152 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, முதல் ஓவரில் 18 ரன்கள், இரண்டாவது ஓவரில் 20 ரன்கள் என ஆரம்பமே அதிரடி காட்டியது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 13.5 ஓவர்களில் விரட்டி பிடித்த தென் ஆப்பிரிக்கா அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென்ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி வருகிற 14ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க: U19 உலகக் கோப்பை 2024:15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.