ETV Bharat / sports

Ashes test: பென் ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்; இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி!

author img

By

Published : Jul 3, 2023, 10:55 AM IST

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Australia won the second match of the Ashes Test series between England and Australia
Australia won the second match of the Ashes Test series between England and Australia

லண்டன்: டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையில் நடக்கக்கூடிய ஆஷஸ் தொடர் புகழ்பெற்றது. ஐந்து போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடர் இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. பர்மிங்காமில் நடந்த முதல் போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி கடந்த 28-ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது.

டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதனை அடுத்து முதல் இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலியாவின் துவக்க ஜோடியாக வார்னர், கவாஜா களமிறங்கினர். கவாஜா பெரிதாக ரன் சேர்க்காமல் 17 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். மற்றொரு துவக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 66 ரன்னில் அவுட் ஆனார்.

அடுத்ததாக லபுஷேன் 47 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களம் கண்ட ட்ராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடி 77 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக அலெக்ஸ் கேரி 22 ரன்களிலும், ஸ்டார்க் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நிலைத்து நின்று ஆடிய ஸ்மித் சதம் அடித்த நிலையில் 110 ரன்னில் அவுட் ஆனார். கேப்டன் கம்மின்ஸ் 22 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார். அனைத்து வீரர்களின் பங்களிப்பினால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் சேர்த்தது.

இதனை அடுத்து இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸை ஸாக் கிராவ்லியும், பென் டக்கெட்டும் தொடங்கினர். இந்த ஜோடி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்த நிலையில், கிராவ்லி 48 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த போப் 42 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் 10 ரன்களில் வெளியேறினார்.

நிலைத்து நின்று ஆடிய பென் டக்கெட் 98 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஹேரி புரூக் மட்டும் குறிப்பிடும் படியாக ஆடி 50 ரன்கள் சேர்த்தார். பிற வீரர்கள் யாரும் பெரும் பங்களிப்பு அளிக்காததால் இங்கிலாந்து அணியால் முதல் இன்னிங்சில் 325 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

இதனை அடுத்து 91 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா அதன் இரண்டாவது இன்னிங்சை துவங்கியது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் 103 ரன்னுடன் ஆஸ்திரேலியா முன்னிலையில் இருந்த நிலையில், நான்காவது நாளில் கவஜாவும், வார்னரும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

வார்னர் 25 ரன்னில் வெளியான நிலையில் லபுஷேன் 30 ரன்னில் அவரது விக்கெட்டை இழந்தார். மற்றொரு துவக்க ஆட்டக்காரரான கவாஜா 77 ரன்னில் வெளியேறினார். அடுத்து களமிறங்கியவர்களில் ஸ்மித் 34 ரன் எடுத்து அவுட் ஆகி இருந்தார். வேறு எவரும் சொல்லிக்கொள்ளும் படியாக ரன் சேர்க்கவில்லை. இதனால் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் 10 விக்கெட்களை இழந்து 279 ரன்கள் சேர்த்து இருந்தது.

இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் துவங்கிய இங்கிலாந்து அணியில் துவக்கத்திலேயே விக்கெட்டுகள் விழுந்தன. நான்காவது நாள் ஆட்டம் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் சேர்த்து இருந்தது. முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது ஆட்டத்தை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து வீரர்கள் நேற்று (ஜூலை 2) ஐந்தாவது நாள் ஆட்டத்தை துவங்கினர்.

நிலைத்து நின்று ஆடிய துவக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 83 ரன்களில் அவுட் ஆனார். அடுத்ததாக பேர்ஸ்டோ சர்ச்சைக்குரிய வகையில் 10 ரன்னில் ரன் அவுட் ஆனார். இதனை அடுத்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிரடி ஆட்டத்தைக் கையாண்டார். 9 போர், 9 சிக்சர்களை விளாசிய அவர் 155 ரன்னில் ஹேசல்வுட் வீசிய பந்தில் அவுட் ஆனார்.

வேறு வீரர்களின் சரியான ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் இங்கிலாந்தின் வெற்றிக்கான பென் ஸ்டோசின் போராட்டம் வீணானது. 43 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.

இதையும் படிங்க: ஐசிசி உலகக்கோப்பையில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறியது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.