ETV Bharat / sitara

'நா.முத்துக்குமார் கவிதைகளை, பாடல்களாக மாற்றிக் கொடுங்க...' - வசந்தபாலன்

author img

By

Published : Jun 9, 2021, 10:36 AM IST

Updated : Jun 9, 2021, 1:05 PM IST

நான் இயக்கி வரும் திரைப்படத்திற்கு நா.முத்துக்குமாரின் கவிதைகளை, திரைப்பாடல்களாக மாற்றித்தரும் இளம் பாடலாசிரியர்களின் பாடல், எனது படத்தில் இடம் பெறும் என இயக்குநர் வசந்தகோபாலன் தெரிவித்துள்ளார்.

நா.முத்துக்குமார்
நா.முத்துக்குமார்

தமிழின் மிகச்சிறந்த முன்னணி பாடல் ஆசிரியரான நா. முத்துக்குமார் கடந்த 2016ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் மறைந்து விட்டார். இருப்பினும் அவரது எழுத்துக்களை ரசிகர்கள் தினம் தினம் கொண்டாடி வருகின்றனர்.

அந்தவகையில் நா.முத்துக்குமாரின் நெருங்கிய நண்பரான இயக்குநர் வசந்தபாலன், நா.முத்துக்குமாரை நினைவுகூரும் விதமாக இளம் பாடலாசிரியர்களுக்கு பாடல் போட்டியை வைத்திருக்கிறார்.

நா.முத்துக்குமார் நினைவேந்தலுக்கு அவரது கவிதைகளை திரைப்பாடலாக மாற்றக் கூறிய வசந்தபாலனின் அறிவிப்பு.
நா.முத்துக்குமார் நினைவேந்தலுக்கு அவரது கவிதைகளை திரைப்பாடலாக மாற்றக் கூறிய வசந்தபாலனின் அறிவிப்பு.

வசந்தபாலன் இயக்க, 'கைதி' பட வில்லன் அர்ஜுன் தாஸ் நடிக்கும் படத்தில், நா.முத்துக்குமாருக்கு நினைவேந்தல் செய்வதுபோல காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் நா.முத்துக்குமாரின் கவிதைகளை மாற்றம் செய்து பாடல்களாக்கி கொடுக்கும் இளம் பாடலாசிரியர்களின் பாடல் இப்படத்தில் பயன்படுத்தப்படும்; அதற்கான அங்கீகாரமும், சன்மானமும் படத்தின் இசைவெளியீட்டு விழா மேடையில் அளிக்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறார், வசந்தபாலன்.

இதுகுறித்த தகவல்களை நேற்று (ஜுன்.8) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வசந்தபாலன் வெளியிட்டுள்ளார். அதில், 'கவிதைக்குள் ஒளிந்திருக்கும் திரைப்பாடலைக் கண்டறியும் கனா! அல்லது சவால். என் பள்ளி நண்பர்களுடன் இணைந்து உருவாக்கிய அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் (URBAN BOYZ STUDIOS) நிறுவனத்தில், அர்ஜுன் தாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன் என்பது ரசிகர்கள் அறிவீர்கள். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தினுடைய கதைப் போக்கில் கவிஞர் நா. முத்துக்குமாருக்கு நினைவேந்தல் செய்வதைப் போல ஒரு கதாபாத்திரமும், சில காட்சிகளும் அமைந்துள்ளன.

நா.முத்துக்குமார்
நா.முத்துக்குமார்

இது எதேச்சையானதா அல்லது 25 ஆண்டு கால நா.முத்துக்குமாருடன் எனக்கு ஏற்பட்ட ஆழமான நட்பின் வெளிப்பாடா அல்லது இரண்டு பேரும் ஜூலை 12 என்ற ஒரே தேதியில் பிறந்ததனால் ஏற்பட்ட மானசீக உறவா அல்லது நான் சோர்வாய் வீட்டில் முடங்கிக் கிடந்த காலத்தில் உப்புக்கறியுடன் என்னை எழுப்பி என்னைப் பசியாற வைத்த நண்பன் மீது கொண்ட பாசமா என்று தெரியவில்லை.

இந்தக் கதையில் வரும் கதைநாயகி பண்பலை வானொலியில் ஒலிக்கும் திரைப்பாடல்களுடன் இணைந்து பாடல்களைக் கேட்டு ரசித்து பாடுகிற ஒரு கதாபாத்திரம். நா.முத்துக்குமாரின் தீவிர ரசிகை. மூன்றாம் பிறையிரவில் கதாநாயகனுக்கு நா.முத்துக்குமாரின் வரிகளில் ஒளிந்திருக்கும் அர்த்தங்களை கதாநாயகி விளக்க, அவனும் மெல்ல, மெல்ல நா. முத்துக்குமாரின் பாடல் வரிகளில் ஈர்க்கப்படுகிறான்; ரசிக்கிறான்.

இருவரும் மீண்டும் சந்திக்கும் ஒரு பௌர்ணமி இரவில், முத்துக்குமாரின் ஒரு பாடல் வரியை கதாநாயகன் உச்சரிக்க, அடுத்த வரியை கதாநாயகி உச்சரிக்க, வரிகள் பாடலாகி, இசையாகி காதல் மலர்கிறது. இந்த தருணத்தில் ஒலிக்கும் ஒரு காதல் பாடலுக்கு பாடல் வரிகள் தேவைப்பட்டது.

நண்பரும், கவிஞருமான கபிலனிடம் எதேச்சையாக இந்த மாதிரி காட்சியமைப்பு உள்ளது என்ன செய்யலாம் என்று பேசிக்கொண்டிருந்தேன். நா.முத்துக்குமாரின் கவிதை வரிகளையே உபயோகப்படுத்தலாமே என்று கபிலன் ஆலோசனை வழங்கினார்.

எனக்கும் அதுதான் மிக சரியாகப்பட்டது. ஆனால், நா.முத்துக்குமார் கடல் அளவு கவிதைகள் எழுதி வைத்திருக்கிறார். அதிலுள்ள ஒரு காதல் கவிதையைப் பாடலாக மாற்றவேண்டும் அல்லது சில காதல் கவிதைகளில் இருந்து முத்து, முத்தான காதல் ததும்பும் வரிகளை தேர்ந்தெடுத்து முழுப்பாடலாக மாற்றவேண்டும்.

நோய்மையில் அது மூச்சு முட்டும் பணி. இதில் மற்றொரு சவாலும் இருக்கிறது. கவிதை வரிகள் உரைநடை பாணியில் இருக்கும். இசை சந்தங்களுக்கு பொருத்தமான வரிகள் இருந்தால்தான் இசையமைக்க இசைவாகவும் இருக்கும், அது வெற்றியும் பெறும்.

இந்த பெரும் பணியில் நா.முத்துக்குமாரின் நண்பனாக, ஒரு திரைப்பட இயக்குநராக நான் மட்டும் ஈடுபடுவதை விட, நா.முத்துக்குமாரின் தீவிர ரசிகர்கள் விரும்பினால் என்னுடன் கை கோர்க்கலாம்.

விரும்பினால் இளம் பாடலாசிரியர்கள் நா.முத்துக்குமாரின் கவிதையிலிருந்து சின்ன, சின்ன மாற்றங்களுடன் சந்தத்திற்கு ஏற்ற ஒரு பாடலை எழுதி அனுப்பலாம். காட்சிக்கும், இசைக்கும் பொருத்தமாக இருக்கும் பாடலை நானும், இசையமைப்பாளரும் இணைந்து தேர்ந்தெடுத்து திரைப்படத்தில் பயன்படுத்திக் கொள்வோம்.

அப்படி தேர்வாகும் பாடலை ஒருங்கிணைத்த அல்லது எழுதிய அந்த ரசிகருக்கு அல்லது பாடலாசிரியருக்கு நா.மு. கவிதையைத் தேர்ந்தெடுத்து தந்ததற்கு அல்லது சில கவிதைகளை வைத்து பாடலாகத் தொகுத்தமைக்கான அங்கீகாரமும், மரியாதையும், சன்மானமும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் வைத்து வழங்கப்படும்.

மேலும் நா.மு கவிதைக்கான காப்புத்தொகை நா.முத்துக்குமாரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும்' என்று தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க : 'ஜகமே தந்திரம் இரண்டாம் பாகம் எழுதச் சொல்லியிருக்கேன்...' - தனுஷ்

Last Updated : Jun 9, 2021, 1:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.