பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத், தனது சர்ச்சைக் கருத்துகளாலும், தடாலடியான நடவடிக்கைகள் மூலமும் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து செய்திகளை ஆக்கிரமித்து வருகிறார்.
’தாம் தூம்’ திரைப்படத்திற்குப் பிறகு கங்கனா தற்போது மீண்டும் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள ’தலைவி’ படத்தின் மூலம் கோலிவுட்டுக்குத் திரும்புகிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படம், வரும் 23ஆம் தேதி வெளியீட்டுக்குத் தயாராக இருந்த நிலையில், தற்போதைய கரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தன் பிறந்த நாளன்று வெளியான ’தலைவி’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்காக கங்கனா சென்னை வந்திருந்தார். இந்நிலையில், கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கங்கனா பகிர்ந்துள்ளார்.
ஈஷா யோகா மையத்தின் பக்தர்களில் ஒருவரான கங்கனா தனது ட்வீட்டில், ”எங்கள் ஆசிரமத்தில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளேன். உலகத்தில் உள்ள எல்லாவற்றிலிருந்தும் துண்டிக்கப்பட்டு, சில நாள்களாவது நம் உளமார்ந்த சிவனோடு இணைவது மிகவும் முக்கியமான விஷயம். ஓம் நமச்சிவாய!” எனப் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: கங்கனாவின் 'தலைவி' வெளியீட்டுத் தேதி ஒத்திவைப்பு!