ETV Bharat / opinion

இந்திய-பசிபிக் பகுதியில் முரண்பாடுகள் அதிகரிக்கும் அபாயம் – ஆஸ்திரேலிய பிரதமர் எச்சரிக்கை!

author img

By

Published : Jul 2, 2020, 4:11 PM IST

2020 பாதுகாப்பு புதுப்பிக்கப்பட்ட வியூக திட்டத்தை வெளியிட்ட ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், 270 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் மதிப்பிலான 10 ஆண்டு பாதுகாப்பு திட்டத்தையும் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டதைப் போல மற்ற நாடுகளுடன் இருக்கும் பதற்றமான சூழ்நிலை குறித்தும் மோரிசனின் வியூக திட்டம் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா ஷர்மாவின் கட்டுரையின் தமிழாக்கம்.

Scott Morrison
Scott Morrison

தென் சீனக் கடலில் எல்லை தாண்டும் சீனாவின் ஆக்கிரமிப்பு போக்கை உலக நாடுகள் கண்டிக்கும் சூழலில், 2016ஆம் ஆண்டில் தனது நாட்டிற்காக வகுத்த பாதுகாப்பு திறன் கட்டமைப்பை ஆஸ்திரேலியா புதுப்பித்துள்ளது. இதன்மூலம் தங்கள் நாட்டின் நலனுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளை தடுப்பது மற்றும் ‘தேவைப்படும் போது நம்பத்தகுந்த ராணுவப் படைகள் மூலம் பதிலளிப்பது’ ஆகியவற்றுக்கு ஆஸ்திரேலியா வழிவகை செய்துள்ளது.

2020ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு திறன் புதுப்பித்தலை வெளியிட்ட ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன், 270 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் மதிப்பிலான 10 ஆண்டு பாதுகாப்பு திட்டத்தை அறிவித்தார். இந்த நிதியில், முதல்முறையாக நிலம், கடல் மற்றும் வான்வழி சார்ந்த நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை அந்நாட்டிற்கு கொள்முதல் செய்யப்படவுள்ளது. ஆஸ்திரேலியாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் இந்திய-பசிபிக் பிராந்தியங்களில் பதற்றம் மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

“நமது எதிர்காலத்தை சிறப்பாக செதுக்குவது மட்டுமில்லாமல், உலக நாடுகளின் போட்டியில் நாம் யார் என்பதை நிலைநிறுத்தும் பொறுப்பிலும் இருக்கிறோம். அதற்கான கட்டுமானம்தான் இது. இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிக்கிறது.

சமீபத்தில் இந்திய-சீன எல்லையில் நடந்த பிரச்னைகள் மட்டுமின்றி, தென்சீனக் கடல், கிழக்கு சீனக் கடல் பகுதிகளிலும்கூட பதற்றம் ஏற்பட்டுள்ளது. தவறான புரிதல்களோடு முரண்பாடுகளும் அதிகரிக்கிறது,” என்று ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன் தெரிவித்துள்ளார்.

“தவறான தகவல் பரிமாற்றம் மற்றும் வெளிநாட்டு தலையீடுகள் ஆகியவை வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. தீவிரவாதம் ஒழிந்துவிடவில்லை, அது தீய சக்திகளின் சித்தாந்தங்களுடன் பிணைந்துள்ளது.

இதுதான் தற்போதைய பதற்றங்களுக்கு காரணமாக உள்ளது. நமது நாட்டின் இறையாண்மைக்கு இதனால் குந்தகம் விளையும் சூழல் ஏற்பட்டுள்ளது” என்று எச்சரித்துள்ளார்.

”அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான அதிகாரப் போட்டி குறித்து தெரிவித்த அவர், இவர்கள் இருவரது போட்டியை மற்றவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. ஏனெனில் கட்டுக்கோப்பான சூழல் கலையும் நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் நாட்டில் சுதந்திரமான, திறந்தநிலை வர்த்தகம் செய்யப்படுவதை அமெரிக்காவோ அல்லது சீனாவோ முடிவு செய்ய முடியாது.

எங்களது முதலீடும் ஒருங்கிணைவும் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. மக்களாட்சிக்கும் மக்களுக்குமான உறவால் எங்கள் நாடு ஒன்றுபட்டுள்ளது.

ஜப்பான், இந்தியா, கொரிய குடியரசு, தென் கிழக்கு ஆசியா, இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பசிபிக் பிராந்தியங்களுக்கென்று செயலாண்மை உள்ளது, செயல்படுத்துவதற்கு விருப்பத்தேர்வுகள் உள்ளன. இவற்றை ஆஸ்திரேலியாவும் கொண்டுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய திட்டத்தின் மூலம் படை கட்டமைப்பு, படை அதிகரிப்பு, சர்வதேச கூட்டிணைவு மற்றும் செயலாக்கங்களை மேம்படுத்துதல், நீண்ட தூரம் தாக்கும் ஆயுதங்களின் கொள்ளளவை அதிகரித்தல், சைபர் தொழில்நுட்பங்கள் மற்றும் சாதனங்களை உருவாக்குதல் ஆகியவை அடங்கிய ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு திட்டமிடலின் முக்கிய மைல்கல்லை எட்ட முடியும்.

ஜப்பான், அமெரிக்கா மற்றும் இந்தியாவுடனான க்வாட் பாதுகாப்பு பேச்சுவார்த்தை நாடுகளின் அங்கமாக இருக்கும் ஆஸ்திரேலியா, இரண்டாம் உலகப் போருக்கு பிறகு தற்போது தனது கடற்படையை மிகப் பெரிய அளவில் மறுகட்டமைப்பு செய்கிறது. மேலும் எஃப்-35 ரக அதிநவீன போர் விமானத்துடன் தனது விமானப் படையை நவீனப்படுத்துகிறது.

இது மட்டுமின்றி, கடல் மார்க்கமாக நீண்டதூரம் தாக்கும் ஏவுகணைகள், வான் வழி மற்றும் கப்பல்களை தாக்கும் ஆயுதங்களோடு சேர்த்து நிலத்தில் தாக்கும் ஆயுதங்களை கொள்முதல் செய்வதற்கு இந்த திட்டம் வழிவகுக்கும்.

கொரோனா வைரஸுக்கும் சீனாவின் வூஹானுக்கும் இருக்கும் தொடர்பு பற்று விசாரணை நடத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் கோரியதை அடுத்து, இந்நாடுகள் மீது பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தப் போவதாக சீனா மிரட்டியது.

இந்த நேரத்தில் கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன், “எங்கள் அண்டை நாடுகளால் சிக்கல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் மவுனத்தை நாங்கள் விரும்பவில்லை. அவர்களது இறையாண்மையை நாங்கள் மதிக்கிறோம், அதில் நாங்கள் சிறந்தவர்கள். அதே நேரம் அவர்களும் எங்களை மதிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

சுய மரியாதை, நாம் நாமாக இருப்பதில் சுதந்திரம், சுதந்திரமாக சிந்தித்தலின் கட்டமைப்பு தான் இறையாண்மை. இதை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்,” என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே, சீனாவின் சைபர் தாக்குதல்கள் அதிகரித்தவண்ணம் இருப்பதால், ஆஸ்திரேலியா அடுத்த பத்தாண்டுகளுகு சைபர் பாதுகாப்புகளுக்கு மட்டும் 1.35 பில்லியன் டாலர் முதலீட்டை மேற்கொள்ளவிருக்கிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான, பாதுகாப்பு கூட்டுறவு தொடர்பாக நடந்த இருதரப்பு பிரதமர்களின் காணொலி உச்சி மாநாடு முடிந்து சில நாட்கள் ஆனநிலையில், “நாம் இருக்கும் இந்திய-பசிபிக் பகுதியில் ஆதிக்கம், வற்புறுத்தல்கள் இல்லாமல் இறையாண்மை மேலோங்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

சிறிய நாடு, பெரிய நாடு என்ற பேதமில்லாமல் அனைவரும் சுதந்திரமாகவும் பன்னாட்டு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை மதிக்க வேண்டும் என்றும் விரும்புகிறோம்,”என்று மோரிசன் கூறியிருப்பது குறிப்பிடத்தது.

இதையும் படிங்க: 'இந்தியா- சீனா மோதலை கவனித்துவருகிறோம்'- வெள்ளை மாளிகை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.